அச்சுறுத்தல்.. அமைதியை விரும்புகிறோம்.. பிரதமர், ஜனாதிபதிக்கு சிதம்பரம் பொது தீட்சிதர்கள் மனு
தீட்சிதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை முன்னின்று நடத்தும் போராட்டக் குழுக்களால் எங்கள் வாழ்க்கை வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
சிதம்பரம்: எங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என என குடியரசுத்தலைவர், பிரதமருக்கு, பொது தீட்சிதர் அமைப்பின் செயலர் மனு அனுப்பி உள்ளார். வழிபாட்டு தலங்களில் போலீஸ் பயன்படுத்தப்படுவதால், தனிப்பட்ட சுதந்திரங்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. பஞ்ச நடன சபைகளில் பொற்சபையாக உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவரான நடராஜருக்கு அருகில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி கும்பிடுவது தொன்று தொட்டு வழக்கம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டபோது கனகசபை மீது ஏறி யாரும் சாமி தரிசனம் செய்யக்கூடாது என கோயில் தீட்சிதர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று குறைந்த பிறகும் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதற்கு பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிதம்பரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பக்தர்களை அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அரசாணை...தமிழக அரசு அதிரடி
கனகசபை மீதேறி சாமி தரிசனம்
அந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், தமிழக அரசு இதுகுறித்து முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு கடந்த வாரம் அரசாணை பிறப்பித்தது. இதனையடுத்து நடராஜர் கோயிலில் பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பக்தர்களும் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர்.விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்ளிட்டோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பொது தீட்சிதர்கள் மனு
இந்த நிலையில் கடலுார் மாவட்டம், சிதம்பரம் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலர் ஹேமசபேச தீட்சிதர் அனுப்பி உள்ள மனுவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, பொது தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து, பூஜைகளை செய்து வருகின்றனர். ழங்காலத்தில் இருந்து கோவிலின் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பொது தீட்சிதர்களால் செய்யப்படுகின்றன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு உறுதி
சிதம்பரம் கோவில் மத செயல்பாடுகளை பாரம்பரிய வழக்கப்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. கோவிலில் தீட்சிதர்கள் தேவாரம் ஓதுகின்றனர். ஆனால் சில குழுக்கள் இல்லை என பொய் பிரசாரம் செய்கின்றனர். கோவில் அருகில் நடக்கும் போராட்டங்களை தடை செய்ய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சுதந்திரம் பாதிப்பு
சில குழுக்கள் மத கடமை, நம்பிக்கையில் தலையிட முயற்சிக்கின்றன. எங்கள் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. வழிபாட்டு தலங்களில் போலீஸ் பயன்படுத்தப்படுவதால் தனிப்பட்ட சுதந்திரங்கள் பாதிக்கப்படுகின்றன. தீட்சிதர்களுக்கு எதிரான வெறுப்பு பிரசாரத்தை முன்னின்று நடத்தும் போராட்டக் குழுக்களால் எங்கள் வாழ்க்கை வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது.
பாதுகாப்பு அளிக்க வேண்டும்
கோவிலுக்குள் நடக்கும் தேவையற்ற போராட்டத்தால் மற்ற பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். கோவிலில் அமைதியான சூழ்நிலை அமைய விரும்புகிறோம். மத நம்பிக்கை கடமை மற்றும் செயல்பாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.