பறந்து வந்த பெட்ரோல் குண்டு.. இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் “டமார்ர்ர்”! சிதம்பரத்தில் “பரபர”
கடலூர்: தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் கடந்த 2 நாட்களாக ஓய்ந்திருந்த நிலையில் நேற்றிரவு மீண்டும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
கடந்த 22 ஆம் தேதி மாலை கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கோவையில் பதற்றம் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவும் கோவை மாவட்டம் கோவைபுதூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆனந்த கல்யாண கிருஷ்ணன் என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை அதிகரித்தது.
பெட்ரோல் குண்டு வீச்சை தொடர்ந்து.. அபாய எச்சரிக்கை மணி அடிக்கும் இந்து முன்னணி காடேஸ்வரன்
பெட்ரோல் குண்டு வீச்சு
இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட சுமார் 20 இடங்களில் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி சென்று இருக்கிறார்கள். இதில் யாருக்கும் பெரியளவில் காயம் ஏற்படவில்லை என்றாலும் தொடர் தாக்குதல்களால் பதற்றம் நிலவுகிறது.
வாகனங்கள் எரிப்பு
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் சிவசங்கர் என்பவரது காரும் எரிக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியிலும் பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் செந்தில்பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து சென்றுள்ளனர்.
பலர் கைது
இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறி பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் அதிகமானோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்து இருந்தார்.
சிதம்பரத்தில் பெட்ரோல் குண்டு
இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களில் பெரிய அளவில் எந்த விதமான தாக்குதல் சம்பவங்களும் நடக்கவில்லை. இந்த நிலையில் நேற்றிரவு கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.