2024-ல் எம்.பி.சீட்டுக்கு குறி! களமிறங்கிய அமைச்சர் மகன் கதிரவன்! களப்பணியை தொடங்கிய ஆதரவாளர்கள்!
கடலூர்: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் மக்களவை தொகுதியை குறிவைத்து களமிறங்கியுள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் மகன் கதிரவன்.
தற்போதைய கடலூர் திமுக எம்.பி. ரமேஷுக்கு மீண்டும் 100% சீட் கிடையாது என்பதால், வாரிசை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சிட்டிங் எம்.பி.ரமேஷின் செயல்பாடுகளால் கடலூர் மக்களவை தொகுதியில் திமுகவுக்கு கெட்டபெயர் உள்ள நிலையில், அதனை துடைத்தெறியும் பணிகளை ஆதரவாளர்கள் மூலம் ஆரம்பித்துள்ளார் கதிரவன்.
திமுக ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி! வரிந்து கட்டும் அமைச்சர் எம்.ஆர்.கே.!
அமைச்சர் மகன்
வேளாண்மைத் துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் மாவட்ட அரசியலில் நேரடியாக களமிறங்கியுள்ளார். இதுவரை தந்தை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு உதவியாகவும், வியூக வகுப்பாளராகவும் திரை மறைவில் பணியாற்றி வந்த இவர் இப்போது கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளராக உயர்ந்துள்ளார். இதன் பின்னணியில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
ரமேஷ் மீது சர்ச்சை
கடலூர் சிட்டிங் திமுக எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளிட்ட இன்னும் பல சர்ச்சைகள் இருப்பதால் அவருக்கு அடுத்த தேர்தலில் 100% சீட் கிடைக்க வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் தொகுதிக்குள்ளும் ரமேஷுக்கு நல்ல பெயர் இல்லை. இவை அனைத்தும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இப்போதே மக்கள் மத்தியில் தனது களப்பணிகளால் கவனம் ஈர்க்கும் வேலையை தொடங்கியுள்ளார் கதிரவன்.
உதயநிதி ஆசி
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பரிபூரண ஆசி கதிரவனுக்கு உண்டு என்பதால், 2024-ல் இவர் தான் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என சத்தியம் செய்யாத குறையாக அவரது ஆதரவாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, ஆகியோரது வாரிசுகள் தற்போது நாடளுமன்ற உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் கதிரவனும் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தந்தை -மகன்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சற்று முன்கோபம் உடையவர். இடம் பொருள் தெரியாமல் யாரையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேசி வம்பில் மாட்டிக்கொள்வார். ஆனால் அவரது மகன் கதிரவன் சற்று உஷாரானவர். கட்சியில் பொறுப்பு கிடைப்பதற்கு முன்னரே தனக்கென தனி ஆதரவாளர்கள் வட்டத்தை கடலூர் திமுகவில் உருவாக்கி வைத்திருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.