வேலைவாய்ப்பு.. 5ஜி பயன்படுத்தி புது செயலிகள் உருவாக்க 100 நவீன லேப்கள்.. பட்ஜெட்டில் அறிவிப்பு!
நாடு முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய செயலிகள் உருவாக்க 500 நவீன லேப்கள் உருவாக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்
டெல்லி: இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி சேவைகளை பயன்படுத்தி புதிய செயலிகளை உருவாக்க நாட்டில் 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து துறையை இந்த செயலிகள் மேம்படுத்த உள்ளது.
இந்தியாவில் அனைத்து சேவைகளும் மேம்பட்டாதக இருக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய, மாநில அரசுகள் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வருகின்றன.
அந்த வகையில் இந்தியா கடந்த ஆண்டு புதிய மைல்கல்லை எட்டியது. இந்தியாவை பொறுத்தமட்டில் 4ஜி சேவை வரை மட்டுமே இருந்த நிலையில் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. தற்போது 100க்கும் அதிகமான நகரங்களில் 5ஜி பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் சென்னை, சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய 6 நகரங்களில் ஜியோ 5ஜி சேவை நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் தான் இன்றைய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியானது. 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் வாசிக்க தொடங்கி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது இந்தியாவில் 5ஜி சேவைகளை பயன்படுத்தி உயர்மட்ட பொறியியல் நிறுவனங்களில் பல்வேறு செயலிகள் உருவாக்கும் வகையிலான 100 நவீன லேப்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம் புதிய வேலைவாய்ப்புகள், வணிக மாதிரிகள், வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த செயலிகள் கல்வி, விவசாயம், போக்குவரத்து அமைப்புகள், சுகாதாரம் போன்ற பயன்பாடுகளை அடிப்படையாக கொண்டிருக்கும் என்றார்.