இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்... 33% உணவு தானியங்கள்... மட்டுமே விநியோகம்!!
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா கால கட்டத்தில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டு இருந்த 56 சதவீத தானிய ஒதுக்கீட்டில் வெறும் 33 சதவீதம் மட்டுமே அவர்களுக்கு சென்று சேர்ந்துள்ளது. இந்த தகவல் நுகர்வோர் விவகாரம், உணவு பொது விநியோக அமைச்சகத்தின் புள்ளி விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
மொத்தம் இந்த திட்டத்தில் 8 லட்சம் டன் கோதுமை, அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வெறும் 6.38 லட்சம் டன் மட்டுமே சென்று சேர்ந்துள்ளது. வெறும் 33 சதவீதம் அதாவது 2.64 மட்டுமே இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சென்று சேர்ந்து இருப்பதாக இந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் கடந்த நான்கு மாதங்களாக இந்த அளவு தானியங்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இந்த திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராதவர்கள் மற்றும் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் என்று அனைவருக்கும் இரண்டு மாதங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த திட்டத்தின் கீழ் மே, ஜூன் மாதங்களுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மாநில அரசுகள் வழங்கி வந்தன.
ஆனாலும், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கொள்முதல் செய்து இருந்த 6.38 டன் உணவு தானியங்களில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெறும் 41 சதவீத உணவு தானியங்களை மட்டுமே ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து இருந்தது. மே மாதத்தில் நாடு முழுவதும் 1.17 லட்சம் டன் உணவு தானியங்கள் மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 1.24 டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்துள்ளது. ஜூலை மாதம் 15,223 டன்னும், ஆகஸ்ட் மாதத்தில் 7,643 டன் உணவு தானியங்களும் விநியோகம் செய்துள்ளது.
நாட்டில் இருக்கும் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 26 மட்டுமே தங்களுக்கு சேர வேண்டிய உணவு தானியங்களை வாங்கிக் கொண்டுள்ளன. பீகார், சத்தீஸ்கர், நாகலாந்து, ஒடிசா ஆகிய மாநிலங்கள் மட்டுமே 100 சதவீதம் உணவு தானியங்களை விநியோகம் செய்து இருப்பதாக தெரிவித்துள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் ஆந்திரப்பிரதேசம் 100 சதவீத உணவு தானியங்களை இறக்குமதி செய்து இருக்கிறது. ஆனால், விநியோக செய்யவில்லை. தெலுங்கானா, கோவா மாநிலங்கள் தலா ஒன்று, மூன்று சதவீதம் மட்டுமே விநியோகம் செய்துள்ளன. 88 சதவீத உணவு தானியங்கள் குஜராத் மாநிலம் பெற்று இருந்தபோதும், வெறும் ஒரு சதவீத உணவு தானியங்களை மட்டுமே விநியோகம் செய்துள்ளது. ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் ஒரு கிலோ பருப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. அதுவும் பெரிய அளவில் விநியோகம் செய்யப்படவில்லை.
ஆத்ம நிர்பர பாரத் திட்டத்தின் கீழ் 16,000 டன் இலவச பருப்பு வழங்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்ற நிலைக்குழு கமிட்டி தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 29,132 டன் உணவு தானியங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது என்று மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இவற்றில் வெறும் 56 சதவீதம் அதாவது 16,323 மட்டுமே இந்தக் கால கட்டத்தில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் டெல்லி மற்றும் மணிப்பூர் மட்டுமே 100 சதவீத பருப்பு வகைகளை விநியோகம் செய்துள்ளன. உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கோவா, தெலங்கானா, குஜராத், தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், லடாக், லட்சத்தீவு ஆகிய யூனியன் மற்றும் மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான பருப்பு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உணவு தானிய திட்டம் கடந்த திங்கள் கிழமையுடன் முடிவடைந்து விட்டது. இந்த திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் வேண்டும் என்று எந்த மாநிலமோ, யூனியன் பிரதேசமோ கோரிக்கை வைக்கவில்லை.












Click it and Unblock the Notifications