மேம்பாலத்தில் எமனாகி கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்.. மனைவி, மகளின் கண்முன்னே துடிதுடித்து இறந்த இளைஞர்
டெல்லி: டெல்லி மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது குறுக்கே இருந்த மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் இளைஞர் ஒருவர் தனது மனைவி, குழந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்தார்.
இந்தியா முழுவதும் காத்தாடி, பட்டம் விடும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதில் தடை செய்யப்பட்ட சீனாவின் மாஞ்சா நூல்கள் பயன்படுத்துவது ஆபத்தானது. இந்த நூல் கண்ணுக்கு தெரியாது என்பதாலும், ஒருவரின் உடலை கிழித்து உயிரை பறிக்கும் திறன் கொண்டது என்பதாலும் மக்கள் மாஞ்சா நூலை மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.
இருப்பினும் சிலர் தடையை மீறி அதனை பயன்படுத்தி வருகின்றனர் அந்த வகையில் டெல்லியில் சீனாவின் மாஞ்சா நூல் ஒருவரின் உயிரை பறித்துள்ளது. இந்த சோக சம்பவம் குறித்த விபரம் வருமாறு:

குடும்பத்துடன் சென்ற இளைஞர்
டெல்லியில் வசித்து வந்தவர் விபின் குமார் (வயது 35). திருமணம் ஆனவர். இவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் தான் ரக் ஷா பந்தன் கொண்டாட விபின் குமார் தனது மனைவி, மகளுடன் பைக்கில் புறப்பட்டு சென்றனர். பைக்கை விபின் குமார் ஓட்டிய நிலையில் பின் இருக்கையில் அவரது மனைவி அமர்ந்திருந்தார். இருவருக்கும் இடையே மகள் இருந்தார்.

கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்
இவர்கள் வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரிபார்க் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது குறுக்கே சீனாவின் மாஞ்சா நூல் சென்றது. இது கண்ணுக்கு தெரியவில்லை. இந்நிலையில் தான் விபின் குமார் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்தது. உடனடியாக சுதாரித்த அவர் பைக்கை நிறுத்தினார். கழுத்தில் இருந்து ரத்தம் கொட்டியது.

மருத்துவமனையில் பலி
இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாஞ்சா நூல் அறுத்து விபின் குமார் அவரது மனைவி, மகளின் கண் முன்னே இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சகோதரி வீட்டுக்கு சென்றபோது சோகம்
முதற்கட்ட விசாரணையில் விபின் குமார் ரக் ஷா பந்தன் கொண்டாட முடிவு செய்தார். இதையடுத்து அவர் தனது சகோதரியின் வீட்டுக்கு மனைவி, மகளுடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் வெட்டியதில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தான் தற்போது தமிழகத்தில் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரத்தில் 13ம் தேதி துவங்கிய பட்டம் விடும் திருவிழா நாளையுடன் முடிவுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications