மொத்தம் 39 பேருக்கு ’ஃபாரின்’ கொரோனா! அடுத்த 40 நாட்கள் ரொம்ப முக்கியம்! ரெடியாகும் மத்திய அரசு!
டெல்லி : சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் மட்டும் ஆறு பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2019ஆம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதன்பிறகு படிப்படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்பையும், உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது.
சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் இரண்டாவது அலை, மூன்றாவது அலை என தனது ஆட்டத்தை காட்டத் தொடங்கிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் கடந்த சில நாட்களாக அதளபாதாளத்தை நோக்கிச் சென்றது.

கொரோனா
இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிஎஃப் 7
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

39 பேர் பாதிப்பு
இந்நிலையில் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் ஆறு பேருக்கு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சீனா இத்தாலி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் 6000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் அவர்களில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

தமிழகத்தில் 6 பேர்
குறிப்பாக வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு எந்த மாதிரியான கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிவதற்காக பரிசோதனை மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், ஹாங்காங்கில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கும், சீனாவில் இருந்து மதுரை வந்த இரண்டு பேருக்கும் கொரோனா உறுதியாக இருக்கிறது. இந்நிலையில் துபாயில் இருந்து சென்னை வந்த இரண்டு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இவர்கள் இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியம்
இதனிடையே வருகின்ற அடுத்த 40 நாட்கள் இந்தியாவுக்கு மிக முக்கியமானவை என சுகாதார நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள். முந்தைய பாதிப்புகளை பார்க்கும் பொழுது இந்த நாட்களில் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்ட்வியா விமான நிலையங்களில் கொரோனா பாதுகாப்பு மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார். நாளை தலைநகரான டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வு செய்யும் அவர் அடுத்தடுத்து பல்வேறு விமான நிலையங்களில் ஆய்வு செய்வார் என தகவல் வெளியாகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications