வருகிறது ஜிஎஸ்டி.. ஆம்னி பஸ், ஊபர், ஓலா புக்கிங் கட்டணம் அதிகரிக்கும்.. ஜன.1 முதல் அமலாக வாய்ப்பு
டெல்லி: ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யப்படும் ஆம்னி பஸ்டிக்கெட், கார், ஆட்டோ, டாக்ஸி சவாரிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட உள்ளது. வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.
இதனால் ஓலா, உபேர் போன்ற வாகன சேவைகளின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பில் சில மாற்றங்களை மத்திய அரசு ஜனவரி 1ஆம் தேதி முதல் கொண்டு வருகிறது. ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கும் ஜிஎஸ்டி புதிதாக விதிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரயில், ஆம்னி ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்ய 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஓலா, ஊபர், ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. புத்தாண்டில் இருந்து ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்கிற அனைத்து பயணத்திற்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் புக் செய்தால் ஜிஎஸ்டி
இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல் ஆப்லைனிலோ அல்லது நேரிலோ ஆட்டோ சேவையைப் பெறுவதற்கு இந்த வரி பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா, உபேர்
இதுவரையில் ஓலா, ஊபர், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் செல்லக்கூடிய இடத்திற்கு கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டு வாடகை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. இனிமேல் அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. கூடுதலாக வசூலிக்கப்படும். வருகிற 1ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆன்லைனில் வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

எதற்கு ஜிஎஸ்டி கிடையாது
ஆம்னி பஸ்களில் ஏ.சி. பஸ்களுக்கு மட்டும் ஏற் கனவே 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டது. 1ஆம் தேதி முதல் குளிர்சாதன வசதி இல்லாத ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யப்படுகிற பேருந்துகளுக்கும் புதிதாக ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோவை பொறுத்தவரை ஆன்லைன் அல்லாத சேவைக்கு ஜி.எஸ்.டி. கிடையாது.

அதிகரிக்கும் விலை உயர்வு
இதனால் Ola,Uber போன்ற ஆட்டோ சேவைகளின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல், சிலிண்டர் போன்ற விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது மேலும் சுமையாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications