R factor அபாயம்... தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை.. மத்திய அரசு வார்னிங்
டெல்லி: நாட்டில் கொரோனா பெருந்தொற்று இன்னும் முடியவில்லை எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்களில் R-factor அதிகமாக உள்ளதால் கூடுதல் கவனம் தேவை என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏற்பட்டது. அப்போது நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் ஒரு கட்டத்தில் நான்காயிரத்தைத் தாண்டியது.

வைரஸ் பாதிப்பு
மே மாதத்திற்குப் பின்னரே நாட்டில் வைரஸ் பாதிப்பு மெல்லக் கட்டுக்குள் வந்தது. கடந்த சில வாரங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. ஆனாலும்கூட கொரோனா 2ஆம் அலை இன்னும் முழுமையாக முடியவில்லை என்றும் இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

44 மாவட்டங்கள்
இந்நிலையில், டெல்டா வைரஸ் பரவல் காரணமாக நாட்டில் 44 மாவட்டங்களில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ளதாக கொரோனா டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் விகே பால் எச்சரித்துள்ளார். குறிப்பாகக் கடந்த நான்கு வாரங்களாகவே 18 மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2ஆம் அலை முடியவில்லை
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "டெல்டா வைரஸ் தான் இப்போது நமக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை. கொரோனா நம் நாட்டில் இன்னும் தீவிரமாகத் தான் உள்ளது. 2ஆம் அலை இன்னும் நம் நாட்டில் முடிந்துவிடவில்லை.கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகமாக உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்த வாரம் குறைந்துள்ளது. இது ஒரு நல்ல விஷயம்.

8 மாநிலங்கள்
அதேபோல R number எனப்படுவது 0.6 அல்லது அதற்குக் குறைவாக இருப்பதே நலம். R number 1ஐ தாண்டிவிட்டது என்றால் வைரஸ் பாதிப்பு வேகமாக உள்ளது என்று அர்த்தம். இது உண்மையிலேயே ஒரு பெரும் சிக்கல் தான்" என்று அவர் கூறினார். ஒரு கொரோனா நோயாளியிடம் இருந்து எத்தனை பேருக்கு வைரஸ் பரவுகிறது என்பதையே R number குறிப்பிடுகிறது. தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு, மிசோரம், கர்நாடகா, புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் R number 1ஐ காட்டிலும் அதிகமாக உள்ளது.

R number
ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மட்டும் R number வேகம் சற்றே குறைகிறது. மறுபுறம் மேற்கு வங்காளம், நாகாலாந்து, ஹரியானா, கோவா, டெல்லி மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் R number 1ஆக உள்ளது. R number 1க்கு அதிகமாக உள்ளது என்றால் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையே குறிப்பதாகச் சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லவ் அகர்வால், தெரிவித்துள்ளார். இந்தியா ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் R number 1.2ஆக உள்ளது. அதாவது ஒரு கொரோனா நோயாளி மூலம் 1.2 பேருக்கு வைரஸ் பாதிப்பு பரவுகிறது என அர்த்தம்.












Click it and Unblock the Notifications