எங்களுக்கு கைதட்டல்கள் வேண்டாம்.. பேரிடர் நிவாரண உதவிதான் வேண்டும்.. கேட்கிறார் மருத்துவர்
டெல்லி: இந்தியர்களே எனக்கு கை தட்ட வேண்டாம், பேரிடர் நிதியுதவி மட்டும் போதும் என மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்தது. இதையடுத்து இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துவிட்டது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து பேசியிருந்தார்.
உத்தரவு
மேலும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டார். மார்ச் 22-ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தினார். இதையடுத்து நேற்றைய தினம் கடைகள், உணவகங்கள் மூடப்பட்டன.
ரயில்கள்
பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, கால்டாக்சி, லாரிகள் என எதுவும் ஓடவில்லை. இந்த நிலையில் கொரோனா ஒழிப்பிற்காக இரவு பகல் பாராமல் பணியாற்றும் சுகாதாரத் துறையினர், போலீஸார், நகர நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், வருவாய் துறையினர் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்த கைகளை தட்டுமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.
கைதட்டல்கள் வேண்டாம்
இந்த நிலையில் தனக்கு கைகளை யாரும் தட்ட வேண்டாம் என டாக்டர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மணீஷா பங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இந்தியர்களே மோடி- பாஜக சொல்வதை யாரும் கேட்க வேண்டாம். எனவே எனக்காக யாரும் கை தட்ட வேண்டும். நான் ஒரு மருத்துவர். எனக்கு உங்கள் கைதட்டல்கள் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
|
நிவாரண நிதி
மேலும் கைதட்டல்களுக்கு பதிலாக பேரிடர் நிவாரண நிதிகளையும் மற்ற உதவிகளையும் விரைந்து அளிக்குமாறு மோடி தலைமையிலான பாஜக அரசிற்கு கோரிக்கை வையுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் ஒருவர் மருத்துவத் துறை உள்ளிட்டோரின் சேவைகளை பாராட்டி மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட நிலையில் மருத்துவர் ஒருவர் இப்படி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.