நீதிபதிகளால் மக்களை மகிழ்விக்க முடியாது.. உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா பரபர பேச்சு
டெல்லி: ‛‛நீதிபதிகளால் மக்களை மகிழ்விக்க முடியாது. இந்த பணி நீதிபதிகளுக்கு வழங்கப்படவில்லை'' என உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி ஹேமந்த் குப்தா பரபரப்பாக பேசினார்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் ஹேமந்த் குப்தா. இவர் பணி ஓய்வு பெற்ற நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் விகாஷ் சிங், துணை தலைவர் பிரதீப் ராய் உள்ளிட்டவர்கள் நீதிபதி ஹேமந்த் குப்தா பற்றி பேசினார். இந்த வேளையில் ஹேமந்த் குப்தா கடந்த வந்த பாதை குறித்து அவர்கள் பேசினர்.

ஹேமந்த குப்தா பேச்சு
இந்த நிகழ்ச்சியில் நீதிபதி ஹேமந்த் குப்தா பேசினார். அப்போது அவர் கூறியதாவது: என் முன் எந்த வடிவ வழக்கு வந்தாலும் அதில் முடிவெடுப்பதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியது இல்லை. கந்தர் கடத்தல் வழக்கு ஒரு பெரிய விஷயமாக இருந்தது. இது நன்றாக எனக்கு நினைவிக்கிறது. நீதிமன்ற அறை முழுவதும் ஆட்கள் நிறைந்திருந்தனர்.

மக்களை மகிழ்விக்க முடியாது
ஒரு நீதிபதி என்பவர் மக்களை மகிழ்விக்க முடியாது. ஏனென்றால் அந்த பொறுப்பு நீதிபதிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த பொறுப்பு என்பது பொதுவாழ்க்கையில் உள்ள மற்றவர்களுக்கு தான் வழங்கப்பட்டுள்ளது. மக்களை மகிழ்விக்கும் நோக்கத்துடன் இந்த பணியை ஒருவரால் செய்ய முடியாது. நான் நீதிமன்றத்தில் கடுமையாக இருந்திருக்கின்றேன். ஆனால் எப்போதும் எனது புரிதலின்படியே உத்தரவுகளை பிறப்பித்து உள்ளேன்.

எந்த வருத்தமும் இல்லை
நீதித்துறைக்கு சிறந்த பங்களிப்பு செய்துள்ளேன் என்ற எண்ணம் உள்ளது. இந்த திருப்தி தான் மிகவும் முக்கியமானது. தற்போது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. எனது கடமைகளை மிகவும் பணிவாகவும், நேர்மையுடனும் மேற்கொள்ள நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். சில சமயங்களில் கூலான மனநிலையை இழந்து இருக்கிறேன். நான் தவறு செய்தாலும் கூட அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை'' என்றார்.

யுயு லலித் பேச்சு
முன்னதாக தலைமை நீதிபதி யுயு லலித் பேசினார். அப்போது அவர் ஹேமந்த் குப்தா கூறுகையில், ‛‛ ஹேமந்த் குப்தாவின் தாத்தா எனது தாத்தா போன்று வழக்கறிஞராகவும், அவரது தந்தையும் எனது தந்தை போன்று நீதிபதியாகவும் இருந்தார். எங்கள் 2 பேருக்கும் நிறைய ஒற்றுமைகள் இரந்தன. ஹேமந்த் குப்தா தான் வழங்க வேண்டிய தீர்ப்புக்காக 2 வாரங்கள் எடுத்து முறைப்படி வழங்கினார். வழக்குகளில் தீர்ப்பு எழுதுவதிலும் விரைந்து செயல்பட்டார்'' என்றார். இந்த வேளையில் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி உள்பட பலர் பேசினர்.












Click it and Unblock the Notifications