தறிகெட்டு ஓடிய சொகுசு கார்.. டெல்லியில் கோர விபத்து! 15 ஆண்டுக்கால சைக்கிள் பயணம் முடிந்த சோகம்
டெல்லி: அதிகாலையில் சைக்கிள் பயணம் சென்றுகொண்டிருந்தவர் மீது சொகுசுக் கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் டெல்லியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் டெல்லி காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சைக்கிளில் சென்ற நபர், கடந்த 15 வருடங்களாக தினந்தோறும் சைக்கிள் பயணம் செய்து வருவதாகவும், இவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது எனவும் உயிரிழந்தவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.

15 ஆண்டுகள்
உயிரிழந்த நபர் டெல்லியின் குருகிராமில் வசித்து வந்த சுபேந்து பானர்ஜி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.. இவர் சைக்கிள் பயணத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்டவராவார். இவருடன் ஒரு குழுவும் இருக்கிறது. இவர்கள் மாதத்திற்கு ஒரு முறை நீண்ட தொலைவு சைக்கிள் பயணத்தை மேற்கொள்வார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இவர் சைக்கிளை தொடாத நாளே கிடையாது என இவரது குழுவினர் கூறுகின்றனர். இதுவரை ஏறத்தாழ 70,000 கி.மீ வரை சைக்கிளில் பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், பல விஷயங்களுக்காக நன்கொடை திரட்டவும் இவர் பயணம் மேற்கொண்டதுண்டு எனவும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

பயணம்
இக்குழுவில் உள்ள பலரும் சுபேந்துவை பார்த்து ஈர்க்கப்பட்டு குழுவில் இணைந்ததாகவும் கூறியுள்ளனர். இவ்வாறு இருக்கையில் நேற்று அதிகாலை சுபேந்து தனது வீட்டிலிருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார். இவரது குழுவினர் யாரும் இந்த பயணத்தில் இணைந்திருக்கவில்லை. சுபேந்து தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஏதோ வெடி சத்தம் கேட்டிருக்கிறது. சத்தத்தை கேட்டு திரும்பி பார்ப்பதற்குள் இந்த விபத்து நடந்திருக்கிறது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்து
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது, "சம்பவம் காலை 6.45 மணிக்கு நடந்திருக்கிறது. அப்போது காரின் ஓட்டுநர் அவரது முதலாளியை குர்கானில் இறக்கிவிட்டுவிட்டு திரும்பிகொண்டிருந்தார். இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக காரின் டயர் ஒன்று வெடித்துள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டுநர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சுபேந்து பானர்ஜி மீது மோதியிருக்கிறார். விபத்தையடுத்து கார் ஓட்டுநர் சுபேந்துவை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

விசாரணை
இதனையடுத்து எங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தோம். அங்கு 'டெல்லி கன்டோன்மென்ட் போர்டு தலைவர், பாதுகாப்பு அமைச்சகம்' என ஸ்டிக்கர் ஒட்டி இருந்த வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று டயர் வெடித்த நிலையில் இருந்துள்ளது. காரிலிருந்து கொஞ்சம் தொலைவில் உருக்குலைந்த நிலையில் சைக்கிள் ஒன்றும் இருந்துள்ளது. பின்னர் விபத்து தொடர்பாக கார் ஓட்டுநரை கைது செய்தோம். விபத்து நடந்த பகுதியில் கார் ஓட்டுநரை தவிர வேறு யாரும் இல்லை. ஓட்டுநர் சம்பவத்தின்போது மது ஏதும் அருந்தியிருக்கவில்லை என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்காக காரின் உரிமையாளரும் அழைக்கப்பட்டிருக்கிறார்" என்று கூறியுள்ளனர். அதிகாலையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் மீது சொகுசு கார் மோதியில் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications