எங்க எல்லாரையும் அரஸெட் செய்தாலும்.. 2024இல் கெஜ்ரிவால்தான் பிரதமர்! அடித்து சொன்ன டெல்லி அமைச்சர்
டெல்லி: மத்திய அரசுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் மது கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இதில் டெல்லி அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக பாஜக ஆளுநரிடம் புகார் அளித்தது.
இந்தச் சூழலில் தான் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. அதன் பிறகு இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் உச்சம் அடைந்துள்ளது.

கோபால் ராய்
இந்நிலையில் டெல்லி சட்டசபையில் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், "பாஜக எங்கள் அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட கைது செய்யலாம். ஆனால் 2024இல் அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமே இந்தியாவின் பிரதமராக வருவார். அதை யாராலும் தடுக்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியுடன் பாஜக தொடர்ந்து மோதுவது அவர்களுக்கு நல்லதல்ல. எங்கள் பதவி போனாலும் சரி, அரசு கவிழ்க்கப்பட்டாலும் சரி, நாங்கள் தொடர்ந்து நாட்டிற்காக வாழ்வோம், அதற்காக உயிரிழக்கவும் தயங்க மாட்டோம்.

எங்களின் வெற்றி
கடந்த ஏழு நாட்களாக பாஜக தலைவர்களின் பொய்கள் அனைத்தையும் நாங்கள் அம்பலப்படுத்தியுள்ளோம். பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சட்டசபையில் தவறான தகவல்களைக் கூறி வருகின்றனர். அதை நாங்கள் அம்பலப்படுத்தியதால், மத்திய அரசு இப்படிச் செய்து வருகிறது. சொல்லப் போனால் இது டெல்லி அரசுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. மணீஷ் சிசோடியாவை குறி வைப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.

குஜராத்
குஜராத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடையே ஆதரவு அதிகரித்து வருகிறது. இதைப் பொருத்து கொள்ள முடியாமல் தான் அவர்கள் இப்படிச் செய்து வருகிறார்கள். மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகு ஆம் ஆத்மியை முடித்துவிடலாம் என அவர்கள் நினைத்தார்கள். இருப்பினும், அவர்கள் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. பொய்யான புகார்களைச் சுமத்துவது மூலம் மணீஷ் சிசோடியாவை அமைதியாக்க முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர் சிங்கம் போல கர்ஜித்துத் திருப்பி அடித்தார்.

தடுக்க முடியாது
சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் எங்கள் அனைத்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தாராளமாகக் கைது செய்யலாம். உங்கள் ஆலோசகர்கள் கூறினால், அரவிந்த் கெஜ்ரிவாலையும் கூட கைது செய்யுங்கள். ஆனால் நான் சொல்லும் ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். 2024இல் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமராக வருவார், அதை யாராலும் தடுக்க முடியாது" என்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால்,
முன்னதாக நேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாடுவதற்கும், மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கும் பாஜக பல கோடி ரூபாயை செலவழித்து உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தான் அவர்கள் உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி விதித்து உள்ளனர்" என்றும் விமர்சித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications