"பெரிய பொய்யர் மோடிதான்; உண்மைக் கண்டறியும் சோதனை அவருக்குதான் தேவை" - ஆம் ஆத்மி சுளீர் அட்டாக்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய பொய்யர் என்றும், அவரை தான் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என பாஜக கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆம் ஆத்மி இவ்வாறு கூறியிருக்கிறது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க நெருங்க, பாஜகவுக்கும், ஆம் ஆத்மிக்கும் இடையேயான மோதல் கடுமையாக சூடுபிடித்து வருகிறது.
பாலியல் குற்றவாளிக்கு ஆதரவு அளித்து மோடி பெண்களை ஏமாற்றிவிட்டார்.. ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு
மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வந்த நிலையில், இதனை அரசு வாபஸ் பெற்றது. இதனிடையே, இந்த மதுபானக் கொள்கையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், பல கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பதாகவும் பாஜக குற்றம்சாட்டியதை அடுத்து, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ அண்மையில் சோதனை நடத்தியது. இந்த சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேற்று அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர்.
'சிசோடியாவுக்கு உண்மைக் கண்டறியும் சோதனை'
சிபிஐ விசாரணைக்கு பிறகு வெளியே வந்த மணீஷ் சிசோடியா பாஜக மீது அதிரடியாக குற்றம்சாட்டினார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துவிடுமாறு சிபிஐ அதிகாரிகள் தனக்கு அழுத்தம் கொடுத்ததாக மணீஷ் சிசோடியா தெரிவித்தார். இது டெல்லி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை கிளப்பியது. இதற்கு சிபிஐ மறுப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் கபில் மிஸ்ரா, "சிபிஐ குறித்து அவதூறு கூறிய மணீஷ் சிசோடியாவை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும்" எனக் கூறினார்.
"மிகப்பெரிய பொய்யர் மோடி"
இந்நிலையில், கபில் மிஸ்ராவின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக ஆம் ஆத்மி எம்எல்ஏவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான சவுரவ் பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடிதான் மிகப்பெரிய பொய்யர் என நான் நம்புகிறேன். அவர் நிறைய பொய்களை கூறி இருக்கிறார்; கூறியும் வருகிறார். அதிலேயே அருமையான பொய் என்ன தெரியுமா? சிபிஐயும், அமலாக்கத்துறை நடுநிலையான நிறுவனங்கள் என்பதுதான். இந்த பொய்யை உண்மைக் கண்டறியும் சோதனையில் மோடி தெரிவிக்க வேண்டும்.
மோடிக்கு தான் தேவை..
இதை தவிர, கொரோனா தொற்றை வெற்றி பெற்றுவிட்டதாக மோடி கூறியது, கருப்புப் பணத்தை மீட்பேன் எனக் கூறியது, கங்கையை தூய்மைப்படுத்துவதாக கூறியது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவது கூறியது என அடுக்கடுக்கான பொய்களை அள்ளி வீசியிருக்கிறார் மோடி. அவரைதான் முதலில் உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு சவுரவ் பரத்வாஜ் கூறினார்.