அவசரம்.. சட்டவிரோதமாக அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி திட்டம்! உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் பரபர பதில் மனு
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யயப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார். அதிமுகவை பிரதிநிதித்துவப்படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் எதுவும் இல்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ளது. இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானார். மேலும் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டது.

உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
இதற்கு ஓ பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது. பொதுக்குழு தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள் தேர்வு செல்லாது எனக்கூறி ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தி அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது விசாரித்த நீதிபதிகள் தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். இது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்தது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதையடுத்து அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து என்பது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுவுக்கு தேவையில்லை. ஆனால் ஓ பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்துக்கு எழுதிய கடிதத்தால் உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட முடியாத சூழல் உள்ளது. இதற்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி கூடுதல் மனு
இதையடுத்து தேர்தல் ஆணையம் தொடர்பான விஷயத்தில் கூடுதல் மனுத்தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,‛‛நிலுவை மனுக்களை காரணம் காட்டி தீர்மானங்களை செயல்படுத்தகூடாது என ஓ பன்னீர் செல்வம் தரப்பு கூறுவது சட்டப்படி ஏற்புடையது கிடையாது. உச்சநீதிமன்ற நிலுவை வழக்குகளை சுட்டிக்காட்டி யாரையும் செயல்படவிடாமல் ஓ பன்னீர் செல்வம் தடுத்து வருகிறார். தேர்தல் ஆணையத்தை வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்படவில்லை. இருப்பினும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டுக்கு ஓ பன்னீர் செல்வம் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

ஓ பன்னீர் செல்வம் பதில் மனு
இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தாக்கல் செய்த கூடுதல் மனுவுக்கு ஓ பன்னீர் செல்வம் தரப்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் எடப்பாடி பழனிச்சாமி மீது பகிரங்கமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்த மனுவில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால உத்தரவால் எடப்பாடி பழனிச்சாமி விரக்தி அடைந்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை மீற எடப்பாடி பழனிச்சாமி அவசரம் காட்டி வருகிறார்.
அதிமுகவை சட்டவிரோதமாக கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். அதிமுகவை பிரதிநிதித்துவப்படுத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிகாரம் எதுவும் இல்லை.

அபராதத்துடன் தள்ளுபடி செய்யுங்க
அடிப்படை உறுப்பினர்கள் விருப்பத்துக்கு மாறாக பொதுக்குழு உறுப்பினர்கள் செயல்படக்கூடாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி விஷயத்தில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இந்த இருபதவிகளில் முடிவு எடுக்கப்படாத நிலையில் எப்படி தேர்தல் ஆணையத்தை வழக்கில் சேர்க்க முடியும்?. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் கூடுதல் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்பன உள்ளிட்ட அம்சங்கள் பதில் மனுவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் விசாரணை
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு மீண்டும் நாளை மறுநாளான திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூடுதல் மனுவும், ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த 2 மனுக்களும் நாளை மறுநாள் விசாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications