அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.. இந்தியாவிடம் உதவி கேட்பதை தவிர வேறு வழியில்லை.. ஆப்கான் தூதர்
டெல்லி: தாலிபான்கள் உடனான பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா ராணுவ உதவியை நாடலாம் என்று இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றுதான் என்றும் தாலிபான்களின் ஆட்டம் ஆப்கானில் மீண்டும் தொடங்கிவிட்டது.
அமெரிக்கப் படைகள் இல்லாததால் ஆப்கானிஸ்தானிலுள்ள தாலிபான் படைகள் தாங்கள் இழந்த சுமார் 80% நிலத்தை ஏற்கனவே மீட்டுவிட்டன. ஏற்கனவே பல பகுதிகளில் ராணுவத்திற்கும் தாலிபான்களும் மோதல் தொடங்கிவிட்டது.

அமெரிக்கப் படைகள்
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் தனது அனைத்து படைகளையும் அமெரிக்கா திரும்பப் பெற்றுக்கொள்ளும். இந்நிலையில் நிலைமையைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசும் தாலிபான் தரப்பும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை தோஹாவில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

அமைதி பேச்சுவார்த்தை
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தை மூலம் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் நடக்குமா என்றால் அதற்கு உறுதியான பதில் இல்லை. ஆப்கானில் தாலிபான்கள் இப்போது ஒரு முழுமையான ராணுவ வெற்றியை நோக்கியே பயணித்து வருகிறது. இந்நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியடையும்பட்சத்தில் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் அரசு இந்தியா ராணுவ உதவியை நாடலாம் என்று இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார்.

இந்திய உதவி
இது குறித்து இந்தியாவுக்கான ஆப்கான் தூதர் ஃபரித் மமுண்ட்சே கூறுகையில், "நாங்கள் தாலிபானுடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்துள்ளோம். ஆனால் வரும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இந்தியாவின் ராணுவ உதவியை நாங்கள் எதிர்பார்க்கும் காலம் வரும். இது அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவே செய்யும்.

எந்த மாதிரியான உதவி
இதற்கு ஆப்கானிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தங்கள் வீரர்கள் அனுப்பி உதவ வேண்டும் என்று பொருள் இல்லை. இப்போது நாட்டில் இருக்கும் நிலையில் அது தேவையில்லை. ஆனால், விமானப்படை உள்ளிட்ட சிலவற்றில் எங்களுக்கு உதவி தேவைப்படும். உதாரணத்திற்கு எங்கள் விமானிகள் பயிற்சி பெற இந்தியா தனது ஏர் ஸ்பேஸை அளித்து உதவலாம். விமானிகள் பயிற்சி பெற இந்தியா மிகச் சரியான ஒரு இடம். இது ஒரு வகையான உதவி.

உதவித்தொகை
அதேபோல ஆப்கான் மாணவர்களுக்கு உதவித்தொகைகளையும் இந்திய அரசு வழங்க வேண்டும். ஆண்டுதோறும் இந்தியா 1,000 மாணவர்களுக்கு உதவித்தொகை அளிக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் படிக்கும் ஆப்கான் மாணவர்கள் எங்கள் நாட்டில் புதிய நாடாளுமன்றம், அணைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை முன்னெடுக்கின்றனர்.

மோசமான நிலை
ஆனால், ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமை மிகவும் மோசமானதாகவும் சிக்கலானதாகவும் உள்ளது. மொத்தம் இருக்கும் 376 மாவட்டங்களில் சுமார் 150 மாவட்டங்களில் அரசுப் படைகள் தாலிபான்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அதாவது நாட்டின் மூன்றில் ஒரு பகுதியில் போர் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 4,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தாலிபான்கள்
கடந்த சில வாரங்களில் தாலிபான்கள் வடக்கு ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியைப் பிடித்துவிட்டனர். கடந்த மாதம்கூட சரண்டர் ஆகச் சென்ற 22 ராணுவ அதிகாரிகளைத் தாலிபான்கள் சுட்டுக் கொன்றனர். இது தொடர்பான வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. தாலிபான்களுடன் ஆன சமாதான முன்னெடுப்புகளை நாங்கல் தீவிரமாகக் கருதுகிறோம். அதேபோல அவர்களும் கண்ணியமான சமாதான பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்ற நினைத்தோம். இருந்தாலும் அவர்கள் வன்முறை பாதையையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கின்றனர்" என்றார்.

இந்தியத் தூதர்கள்
மேலும், சில மாகாண தலைநகரங்களையும் தாலிபான் படைகள் சுற்றிவளைக்கும் சூழ்நிலை எழுந்துள்ளதாகவும் ஆப்கான் தூதர் ஃபரித் மமுண்ட் தெரிவித்தார். இருப்பினும், மக்கள் அதிகம் உள்ள நகரங்களில் அரசுப் படைகளை எதிர்த்துப் போராட விரும்பவில்லை என்று தாலிபான்கள் அறிவித்துள்ளன. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை தான், இந்தியத் தூதர்களை மத்திய அரசு ஆப்கானிலிருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications