நாமல் ராஜபக்சேவை தொடர்ந்து இந்தியா வருகிறார் பசில் ராஜபக்சே- பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்
டெல்லி: இலங்கை அமைச்சரும் மகிந்த ராஜபக்சேவின் மகனுமாகிய நாமல் ராஜபக்சேவை தொடர்ந்து மகிந்தவின் சகோதரரும் இலங்கை நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வருகை தர உள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை பசில் ராஜபக்சே சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இலங்கையில் அதிபராக கோத்தபாய ராஜபக்சேவும் பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியில் உள்ளனர். மகிந்த ராஜபக்சே அமைச்சரவையில் அவரது சகோதரர் பசில் ராஜபக்சே, மகன் நாமல் ராஜபக்சே ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
கிளாஸ்கோ மாநாடு.. இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்பை மீறி.. பிரதமர் மோடி - கோத்தபாய ராஜபக்சே சந்திப்பு
உ.பி.யில் நாமல் ராஜபக்சே
அண்மையில் உ.பி. மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு நாமல் ராஜபக்சே அழைக்கப்பட்டிருந்தார். பிரதமர் மோடி திறந்து வைத்த குஷிநகர் விமான நிலைய திறப்பு விழாவில் நாமல் ராஜபக்சே தலைமையில் 100க்கும் மேற்பட்ட சிங்கள பவுத்த துறவிகளும் பங்கேற்றனர்.
தமிழகம் எதிர்ப்பு
ஆனால் இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக சட்டசபை தீர்மானங்களை சுட்டிக் காட்டி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மத்திய பாஜக அரசு இதனை பொருட்படுத்தவில்லை.
இந்தியா வரும் பசில் ராஜபக்சே
இந்த நிலையில் இலங்கை நிதி அமைச்சராக இருக்கும் பசில் ராஜபக்சே விரைவில் இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தகவலை கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் கூறுகையில், இந்தியாவிடம் கடன் பெறுவதற்காக பசில் ராஜபக்சே செல்லவில்லை; இந்தியாவின் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலே பசில் ராஜபக்சே பயணம் மேற்கொள்கிறார். அதேபோல் இருதரப்பு சுற்றுலா உறவை மேம்படுத்தவும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றார். பசில் ராஜபக்சே, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். மேலும் அவரது விரிவான பயண திட்டங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
நிதி நெருக்கடியில் இலங்கை
இலங்கையைப் பொறுத்தவரையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கூட நிதி இல்லாமல் திண்டாடி வருகிறது. இன்னொரு பக்கம் பெருமளவு கடன் கொடுத்த சீனாவுடன் பல்வேறு பிரச்சனைகளில் இலங்கை முரண்பட்டும் நிற்கிறது. இந்த நிலையில் திடீரென பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.