பிரதமர் மோடி கூறிய ஒரு வார்த்தை.. நாடு முழுவதும் மக்கள் ஆர்வம்.. சீட்டாக்களுக்கான பெயர்களை பாருங்க!
டெல்லி: பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் உள்ள 7 சீட்டாக்களுக்கு ‛துர்கா, சக்தி, பிரம்மா, ருத்ரா' உள்பட மொத்தம் 750க்கும் அதிகமான பெயர்களை பொதுமக்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தியாவில் 1947ல் சீட்டா எனும் சிவிங்கப்புலி இருந்தது. அதன்பிறகு அந்த சீட்டா இறந்தது. இதனால் இந்தியாவில் சீட்டா இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாக 1952ல் அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த 70 ஆண்டுகளாக இந்தியாவில் சீட்டா எனும் சிவிங்கப்புலி இல்லாத நிலை இருந்தது. இதையடுத்து நமீபியாவிடம் இருந்து இந்தியாவுக்கு சீட்டாக்கள் கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே அண்ணாசிலை அவமதிப்பு: பாஜகவினர் 3 பேர் அதிரடி கைது
சிறப்பு விமானத்தில் வருகை
அதன்படி 8 சீட்டாக்கள் சரக்கு விமானம் பி747 மூலம் நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டது. இதற்காக பிரத்யேகமாக சிறப்பு வசதி கொண்ட சரக்கு விமானம் பி747 பயன்படுத்தப்பட்டது. மேலும் விமானத்தின் முன்பகுதி புலியின் முகம் போல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த விமானத்தின் மூலம் நமீபியாவில் இருந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன.
திறந்து விட்ட பிரதமர் மோடி
இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 17 ம் தேதி தனது 72வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது அவர் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட 5 ஆண், 3 பெண் என 8 சீட்டாக்களை மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார். ஒரு சீட்டாவுக்கு மட்டும் ‛ஆஷா' என பெயர் சூட்டினார். மேலும் சீட்டாக்களை கேமராவில் போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.
பிரதமர் மோடி பேச்சு
இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் நடந்த 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் 8 சீட்டாக்கள் பற்றி பேசினார். அப்போது ஒரு சீட்டாவுக்கு ஆஷா என பெயர் சூட்டிய நிலையில் எல்டன், ப்ரெடி, ஓபன், சியாயா, திபிலிசி, சாஷா மற்றும் சவன்னா என்ற பெயரில் இருக்கும் ஏழு சிறுத்தைகளுக்கு இந்தியப் பாரம்பரிய முறையில் பெயர் சூட்ட நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக MyGov தளத்தில் நடைபெறும் போட்டியில் பங்கேற்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பொதுமக்கள் பரிந்துரைக்கும் பெயர்கள்
இந்நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 7 சீட்டாக்களுக்கும் பொதுமக்கள் பெயர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வரை 750க்கும் மேற்பட்ட பெயர்களை பொதுமக்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். அதன்படி வீர், ப்னாகி, பைரவ், பிரம்மா, ருத்ரா, துர்கா, கௌரி, பத்ரா, சக்தி, பிரஹஸ்பதி, சின்மயி, சதுர், வீரா, ரக்சா, மேதா மற்றும் மயூர் போன்ற பெயர்களைப் பரிந்துரைத்துள்ளது.