7 ஆண்டுகளில் குறைந்த ராணுவ ஆள்சேர்ப்பு! அக்னிபாத் திட்ட போராட்டக்காரர்களின் பிரச்சனைகள் என்ன?
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது அடுத்த ஆண்டு பிரச்சனையாக மாறும் எனவும், கடந்த 7 ஆண்டுகளில் தற்போது தான் குறைந்தபட்சமாக ஆள்சேர்ப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் பாதுகாப்பு படைக்கான ஆள்சேர்ப்பு திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலம் சேவையாற்ற முடியும்.
அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 17.5 வயது முதல் 21 வயதுக்குள் பணிக்கு சேரலாம். இவர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருக்கலாம். 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர்.

சம்பளம் எவ்வளவு?
தக்க வைக்கப்படும் வீரர்கள் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். முதல் ஆண்டு மாத சம்பளமாக ரூ.30 ஆயிரமும், 4வது ஆண்டில் ரூ.40 ஆயிரமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சம்பளத்தில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். 4 ஆண்டுக்கு பிறகு ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒப்பந்த பணி போன்று இத்திட்டம் உள்ளதால் ஏராளமானவர்களால் நாட்டுக்கு நீண்டகாலம் சேவையாற்ற முடியாமல் போகலாம்.இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர். எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளன. பீகார், உத்தர பிரதேசம், ஜார்கண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சில இடங்களில் வன்முறை ஏற்பட்டன. போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி, தடியடி நடத்தி வருகின்றன. செகந்திராபாத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

மத்திய அரசு உறுதி
இருப்பினும் மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளது. போராட்டத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினர். அதோடு ராணுவம், விமானப்படை, கடற்படை தளபதிகளும் அக்னிபாத் திட்டத்தில் விரைவில் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

வயது வரம்பு அதிகரிப்பு
இதற்கிடையே பணியில் சேரும் வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2022ம் ஆண்டு நியமனத்துக்கு மட்டுமே பொருந்தும். கடந்த இரண்டு வருடங்களாக ஆள்சேர்ப்பு நடவடிக்கை எடுக்காத நிலையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிரச்சனைக்கு வாய்ப்பு
இது வயது வரம்பு உயர்வு என்பது இந்த ஆண்டுக்கு மட்டுமே தற்காலிக தீர்வாக இருக்கலாம் என பலர் கூறுகின்றனர். ஏனென்றால் அடுத்த ஆண்டு ஆள்சேர்ப்பு நடைமுறையில் மீண்டும் வயது 21 ஆக குறைக்கும்போது இது பெரிய பிரச்சனையாக இருக்கலாம். இருப்பினும் தற்போது வரை 2022க்கு பிறகு இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த எந்த விபரங்களும் தற்போது வரை அரசு தரப்பில் கூறப்படவில்லை.

4 ஆண்டில் 2 லட்சம் பேர்
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனாவால் ஆட்சேர்ப்பு நடக்கவில்லை. தற்போது முப்படைகளுக்கும் சேர்த்து 46,000 பேர் சேர்க்கப்பட உள்ளன. அதன்படி இத்திட்டத்தின் முதல் நான்கு ஆண்டில் 202,900 அக்னிவீரர்கள் சேர்க்கப்படலாம். இதில் சுமார் 175,000 பேர் ராணுவத்தில் இருப்பர். அதாவது அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று சேவைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50,000 அக்னிவீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏமாற்றமடையும் சூழல்
முதற்கட்டமாக இந்த ஆண்டு 46,000 பேரை முப்படைகளிலும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இது 2015ம் ஆண்டில் இருந்து முப்படைகளுக்கும் சேர்க்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாகவே உள்ளது. தற்போதைய வயது தளர்வு மற்றும் கொரோனாவால் ஆள்சேர்ப்பு நடத்தாதது ஆகியவற்றால் இந்த பணியிடங்களுக்கு ஏராளமானவர்கள் போட்டியிட வாய்ப்புள்ளது. இதனால் பலர் பாதுகாப்பு படையில் வேலை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழல் உள்ளது.

2019-2020ல் அதிகம்
இந்த ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் கடந்த 7 ஆண்டுகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 2019-2020ல் 80,572 பேர் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் அதன்பிறகு ஆள்சேர்ப்பு நடவடிக்கை இல்லை. 2015 மற்றும் 2020ம் ஆண்டுக்கு இடையே இராணுவம் ஒவ்வொரு ஆண்டும் 50,000 க்கும் மேற்பட்ட வீரர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதன்படி 2015-2016ல் இராணுவம் நாடு முழுவதும் 71,804 பேரை பணியமர்த்தியது. இது 2016-217 இல் 52,447 ஆகவும், 2017-2018ல் 50,026 ஆகவும் குறைந்தது. 2018-2019 இல் 53,431 அதிகரித்தது. 2019-2020ல் மட்டும் 80,572 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

8 மாநிலங்களில் 60 சதவீதம் பேர்
2015 முதல் ராணுவத்தில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் வெறும் எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் என மத்திய அரசின் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதன்படி பஞ்சாப், ஹரியானா, பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து 186,795 பேர் ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுகளில் மொத்தம் 3,08,280 பேர் ராணுவத்தில் சேர்க்கப்பட்ட நிலையில் 1,86,795 பேர் அதாவது 60 பங்கு இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்.

கிராமங்களில் 75 சதவீதம் பேர்
மேலும் கிராமங்களில் இருந்து தான் அதிகமானவர்கள் ராணுவத்தில் இணைந்து வருகின்றனர். ஒரு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஏறக்குறைய 75 சதவீதம் பேர் கிராமங்களில் இருந்து வந்தவர்களாக உள்ளனர். அதிகபட்சமாக 2018-2019ம் ஆண்டில் மட்டும் 78.32 சதவீதம் பேர் கிராமத்தை சேர்ந்தவர்கள். இது 2019-2020ல் இந்த அளவு 77.20 சதவீதமாக இருந்தது. அதன்பிறகு 2021 ஜூலையில் கொரோனாவால் ஆள்சேர்ப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications