"அதிமுகவின் இடைக்கால பொது செயலாளர்" எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த டெல்லி.. ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த இடி
டெல்லி: ஜி20 கூட்டத்திற்கான அழைப்பு கடிதத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என டெல்லியே அங்கீகரித்துள்ளதால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் நாளை டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சித் தலைவர்கள், மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.31,000 வரை மாத சம்பளம்.. மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. தேதி முடியப்போகுது
மத்திய அமைச்சகம்
அந்த கடிதம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனுப்பியுள்ளார். அதில் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச் செயலாளர், அஇஅதிமுக, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர்
தன்னை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் என டெல்லி தலைமையே அங்கீகரித்துவிட்டது. இதனால் உற்சாகத்துடன் டெல்லி ஜி 20 கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறாராம். அதிமுகவில் பிளவு தொடங்கியதிலிருந்தே டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.
ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு
பெரும்பாலும் ஓபிஎஸ்ஸுக்கே டெல்லி தலைமையின் ஆதரவு என பல தருணங்களில் கண்கூடாக பார்த்தோம். அண்மையில் கூட சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்காதது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது ஒவ்வொரு முறையும் அவரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இந்த பதில் டெல்லி தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதால் ஓபிஎஸ் தரப்பு சற்று ஆசுவாசமாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் எடப்பாடிதான் அதிமுக என்பதை டெல்லி தலைமை ஊர்ஜிதப்படுத்திவிட்டது. நாளை மறுநாள் உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக் குழு வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் பாஜகவின் இத்தகைய பச்சைக் கொடியால் எடப்பாடி தரப்பின் கை டெல்லியில் ஓங்கியுள்ளதையே காட்டுகிறது.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்
அதே வேளையில் இன்னும் தான்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என கூறி வரும் ஓபிஎஸ் தரப்புக்கு மத்திய அரசின் இந்த கடிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் டெல்லி தலைமை மூலம் அதிமுக ஒருங்கிணைந்து பழைய பன்னீர்செல்வமாக மீண்டும் இரட்டை தலைமை பொறுப்பில் வலம் வருவோம் என போராடினார் ஓபிஎஸ்.
பிரதமர் மோடி
சென்னைக்கு பிரதமர் மோடி வந்தாலும் சரி உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்தாலும் சரி அவர்களை எப்படியாவது தனியாக சந்திக்க நேரம் கேட்டு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற தீர்மானத்திற்கு ஒரு முடிவு கட்டலாம் என டெல்லி தலைமையையும் கோர்ட்டையும் நம்பியிருந்தார். ஆனால் இன்று வெண்ணெய் திரண்டு வரும் போது தாழி உடைந்துவிட்டது போல் ஓபிஎஸ்ஸுக்கு தொடர்ந்து அடிமேல் அடியாக உள்ளது.
கோவை செல்வராஜ்
நேற்றைய தினம்தான் ஓபிஎஸ்ஸின் தீவிர ஆதரவாளர் கோவை செல்வராஜ் அதிமுகவிலிருந்து விலகினார். இந்த ஷாக்கில் இருந்து மீளுவதற்குள் டெல்லி தலைமை மூலம் மற்றொரு ஷாக் தகவலால் ஓபிஎஸ் கூடாரமே கடும் வேதனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு , நெடுஞ்சாலை துறை ஒப்பந்த வழக்கு என இத்தனை கத்திகள் எடப்பாடி தலை மீது தொங்கி கொண்டிருப்பதால் அதிமுகவை தாம்தான் வழி நடத்த போகிறோம் என்று ஓபிஎஸ் நம்பியிருந்தது அவருக்கும் அவருடன் இருக்கும் நிர்வாகிகளுக்கும் மிகப் பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. இந்த அழைப்பு கடிதத்திற்கு பிறகு எத்தனை பேர் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகி எடப்பாடி பக்கம் தாவுகிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது.