எனக்கு 37.. உனக்கும் 37.. உ.பியில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி இடையே முடிவான லோக்சபா தொகுதி பங்கீடு
டெல்லி: உத்தர பிரதேசத்தில், லோக்சபா தேர்தலின் போது காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் ஈடுபட்டுள்ளனர். இருவரும் சந்தித்து பேசி, தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தர பிரதேச அரசியலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் நேர் எதிர் துருவங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால், காங்கிரஸை ஓரங்கட்டும் முயற்சியில் இவ்விரு தலைவர்களும் தீவிரமாக இறங்கியுள்ளதாக அவர்களின் சமீப கால நடவடிக்கைகள் காட்டுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, அகிலேஷ் யாதவும், மாயாவதியும் சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளி வந்த நிலையில், பாஜக 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ள சூழலில் இந்த சந்திப்பு நடந்திருக்கின்றது. இரு தலைவர்களும் காங்கிரசின் நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் அமைச்சரவையில் அகிலேஷ் மற்றும் மாயாவதி கட்சி உறுப்பினர்களுக்கு அமைச்சர் பொறுப்பு எதையும் காங்கிரஸ் அளிக்கவில்லை. அதனை முன்வைத்தும் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால், லோக் சபா தேர்தலின் போது காங்கிரசை ஓரங்கட்ட அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்பின் போது உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள லோக்சபா தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளை பங்கிட்டு கொண்டதாக தெரிகிறது. காங்கிரசுக் வெறும் இரண்டே இரண்டு தொகுதிகளை மட்டும் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என அகிலேஷ், மாயாவதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த வாரம் இரு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது பாஜக கூட்டணி உத்தர பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80-ல் 73 தொகுதிகளை கைப்பற்றியது. சமீபத்தில் அங்கு நடைபெற்ற கோரக்பூர், புல்பூர் இடைத்தேர்தலில் அக்கட்சி மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவிடம் 2 தொகுதிகளை இழந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.