“அக்னிபாத்” வன்முறை.. முப்படை தளபதிகளுடன் அவசரமாய் ஆலோசித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்!
டெல்லி: அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கும் போராட்டங்களுக்கு மத்தியில் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அக்னிபாத் திட்டத்தின் ஆள்சேர்ப்பு, சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளில் 'அக்னிபாத்' திட்டத்தில் ஆள்சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தளபதிகளுடன் விபரங்கள் வெளியிட்டார்.
அதன்படி திட்டத்தில் 4 ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும். அதன்பிறகு 25 சதவீதம் பேர் மட்டுமே தக்கவைக்கப்பட்டு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. ரூ.11 லட்சத்துக்கு பணபலன் வழங்கப்படும்.

இளைஞர்கள் போராட்டம்
இதுபற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக ராணுவத்தில் சேர விரும்பியவர்களை இணைய விடாமல் கொரோனா தடுத்தது. இனி அக்னிபாத் திட்டத்தில் முப்படைகளுக்கும் ஆள்சேர்ப்பு நடக்கும்''என்றார். இதற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பீகார், உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் போராட்டம் உருவாகி வன்முறை வெடித்தது. இதனால் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளும் கூறி வருகின்றன.

ராஜ்நாத் சிங் ஆலோசனை
இந்நிலையில் தான் இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினார். கடற்படை தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் விமானப்படை தலைமை தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்ரி, ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதில் துணை ராணுவ தளபதி பிஎஸ் ராஜூ பங்கேற்றார். இவர்கள் 3 பேருடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சவால்கள் ஏற்பட்டால் அதனை சந்திப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தில் ஆள்சேர்ப்பு நடவடிக்கையை செய்யும் தேதி பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொடர்ந்து அறிவிக்கப்படும் சலுகை
இதற்கிடையே தான் அக்னிபாத் வீரர்களுக்கு தொடர்ந்து சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதாவது அக்னிபாத் திட்டத்தில் செயலாற்றியவர்களுக்கு மத்திய பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதற்கு முன்பு மத்திய துணை ராணுவ படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும், இந்த தளர்வு முதல் பேட்சுக்கு 5 ஆண்டாகவும் இருக்கும்'' என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆள்சேர்ப்பு எப்போது?
இந்நிலையில் விரைவில் ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தில் ஆள்சேர்ப்புக்கான தேதி வெளியாக உள்ளது. அதேநேரத்தில் விமானப்படையில் ஜூன் 24 முதல் இத்திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு நடவடிக்கை துவங்கும் என அதன் தளபதி விஆர் சவுத்ரி நேற்றே அறிவித்து இருந்தார். இதேபோல் விரைவில் கடற்படையிலும் ஆள்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications