விமானங்களில் மாஸ்க் கட்டாயம்.. அதிகரிக்கும் கொரோனாவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்த டிஜிசிஏ!
டெல்லி: டெல்லி, மும்பை நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிதல் உள்பட கொரோனா தடுப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்) சார்பில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவை 3 அலைகளாக தாக்கி உள்ளது. தற்போது தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் சில நகரங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, மும்பை நகரங்களில் பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.

டிஜிசிஏ உத்தரவு
இதனால் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தான் விமான பயணிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டிஜிசிஏ (சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம்) சார்பில் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் கட்டாயம்
அந்த உத்தரவில், ‛‛கொரோனா பாதிப்பு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்கான விமானங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிதல் உள்பட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பயணிகள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு எவ்வளவு?
இந்தியாவில் இன்று புதிதாக 9,062 பேருக்கு கொரோனா உறுதியானது. அதேநேரத்தில் டெல்லி, மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

டெல்லியில் எவ்வளவு?
Tகஸ்ட் 1ம் தேதி முதல் டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 1ம் தேதி பாதிப்பை ஒப்பிடும்போது டெல்லியில் தற்போது கொரோனா பாதிப்பானது பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மருத்துவமனையில் உள்ளனர். மேலும் சனிக்கிழமை முதல் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் 5க்கும் அதிகமானவர்கள் பலியாகி வருகின்றனர். இது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 15 நாட்களில் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 மடங்கு வரை அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி மருத்துவமனையில் 588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 205 பேர் ஆக்ஸிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். 22 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பையில் எவ்வளவு?
மேலும் ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி நிலவரப்படி மும்பையிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி மும்பையில் 584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இருப்பினும் அதிர்ஷ்வசமாக கொரோனா பலி பதிவாகவில்லை. இந்தியாவின் முக்கிய நகரங்களாக உள்ள டெல்லி, மும்பையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தான் விமானங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என பயணிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications