பழைய பொருட்கள் மூலம் புது காரை தயாரித்தவருக்கு.. ஆனந்த் மகேந்திரா கொடுத்த செம சர்ப்ரைஸ்.. நெகிழ்ச்சி
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் தத்தாத்ராய லோகர். இவரது மகளுக்கு கார் என்றால் கொள்ளை பிரியம். நாம் ஒரு கார் வாங்க வேண்டும் என்று தனது தந்தையிடம் அடிக்கடி கூறி வந்தார். ஆனால் ஏழ்மை குடும்பத்தில் பிறந்த தத்தாத்ராய லோகர் கார் வாங்குவது அவ்வளவு எளிதல்ல.
ஆனாலும் மகளின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். பல லட்சக்கணக்கில் கார் வாங்க முடியாது என்பதால் தானே குறைந்த விலையில் ஒரு காரை வடிவமைக்க முடிவு செய்தார்.

ரூ.60,000 செலவில் புதிய கார்
தொடர்ந்து தனது எண்ணத்தை செயலாக்கமாக்கினார். .தனது வீட்டில் இருந்த பழைய உலோக பொருள்கள் மற்றும் துணி , கண்ணாடி போன்ற கையில் கிடைத்த பொருள்களை கொண்டே அசத்தலாக ஒரு காரை தயாரித்தார் தத்தாத்ராய லோகர். வெறும் ரூ.60,000 செலவில் தந்தை புதிய காரை வடிவமைத்தது கண்டு அவரது மகள் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.

பட்டிதொட்டியெங்கும் வைரல்
பழைய பொருள்களை கொண்டு உருவாக்கப்பட்ட தத்தாத்ராய லோகரின் கார் நாட்கள் செல்ல, செல்ல பட்டிதொட்டியெங்கும் வைரலானது. பல்வேறு செய்தி நிறுவனமும் இது குறித்த செய்திகளை வெளியிட்டன. தத்தாத்ராய லோகருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த தகவல் மகேந்திரா கார் நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவின் காதுகளையும் எட்டியது.

பாராட்டிய ஆனந்த் மகேந்திரா
தத்தாத்ராய லோகரின் காரை பார்த்து ஆனந்த் மகேந்திரா அசந்து போய் விட்டார். தொடர்ந்து தத்தாத்ராய லோகரை வெகுவாக பாராட்டிய அவர், '' இந்த கார் தெளிவான விதிமுறைகளின்றி உருவாக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நமது மக்களின் புத்தி கூர்மை மற்றும் சிறந்த செயல் திறன்களைப் பாராட்டுவதை ஒருபோதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று புகழாரம் சூட்டியுள்ளார். வெறுமனே பாராட்டுவதோடு நிறுத்தி விடாமல் அடுத்து ஆனந்த் மகேந்திரா செய்த செயல்தான் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதிய கார் பரிசு
அதாவது இருப்பதை வைத்து மிக தரமான காரை உருவாக்கிய தத்தாத்ராய லோகருக்கு புதிய கார் ஒன்று பரிசளிக்கப்படும் என்று ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர், '' தத்தாத்ராய லோகர் உருவாக்கிய கார் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளதால் விரைவிலோ அல்லது பிறகோ அவரது கார் இயங்குவதற்கு அதிகாரிகள் தடை விதிக்கலாம். நான் தனிப்பட்ட முறையில் அவருக்குப் ஒரு பொலேரோ காரை வழங்குவேன். அதாவது குறைந்த வளத்தை வைத்து, அதிகம் செய்யலாம் என்று உணர்த்துவதால் அவரது உருவாக்கம் நம்மை ஊக்குவிக்கும் வகையில் மஹிந்திரா ரிசர்ச் வேலியில் காட்டப்படலாம்' என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications