குடியரசுத் தலைவர் தேர்தலில்.. செம ட்விஸ்ட்.. பாஜக வேட்பாளருக்கு ஜெகன் மோகன் ஆதரவு.. பரபர அறிவிப்பு
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த ஜூன் 15ம் தேதி முதல் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டார். அதேபோல் பாஜக கூட்டணியின் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டார்.
வேட்பு மனுத்தாக்கல்
இதனைத்தொடர்ந்து நேற்று டெல்லி வந்த திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனைத்தொடர்ந்து இன்று நாடாளுமன்ற ராஜ்யசபா செயலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநிலங்களின் முதலமைச்சர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
பாஜவின் தேவை எவ்வளவு?
நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் என அனைத்து எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்களின் வாக்குகளில் 48.9 சதவீத வாக்குகளை பாஜக கூட்டணி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் 51.1 சதவீதம் பெற்றுள்ளன. அதாவது மொத்த வாக்குகளின் மதிப்பான 10,86,431ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் வாக்கு மதிப்பு 5,25,706 ஆகும். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற 50க்கும் அதிகமான சதவிகித வாக்குகளைப் பெற வேண்டும். பா.ஜ.க கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு வெற்றி பெறுவதற்கு 20,000 வாக்குகள் குறைவாக உள்ளது.
மாநிலங்கள் ஆதரவு
இந்தநிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற மாநில கட்சிகளின் ஆதரவை பெற பெரும் போட்டி நிலவி வருகிறது. இந்த சுழலில், திரெளபதி முர்மு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார். இதேபோல் திரெளபதி முர்முவுக்கு ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியும் ஆதரவை தெரிவித்துள்ளார். அண்மையில் டெல்லி சென்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பாஜகவுக்கு பெரும் ஆதரவு
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் பாமக ஏற்கனவே ஆதரவளித்துள்ளது. இதுமட்டுமின்றி அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, வரும் ஜூன் 27ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யவுள்ளார். அதன்பின் மற்ற கட்சிகளின் ஆதரவு யாருக்கு என்பது தெரிய வரும். முக்கியமாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவ் ஆகியோர் யாருக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.