நீதிபதிகள் நியமனம்.. கொலிஜியம் அளித்த பட்டியலை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல்!
டெல்லி: நீதிபதிகள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பட்டியலை மத்திய அரசு கடந்த 25 ஆம் தேதி நிராகரித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்தப்பட்டியலில் மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பால் பெயரும் இடம் பெற்றிருந்தாக கூறப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பு சிபாரிசு செய்பவர்களை மத்திய அரசு நியமித்து வருகிறது.
சிபாரிசு செய்தவர்களை நியமிக்க 'கொலீஜியம்' மீண்டும் வற்புறுத்திய 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
'கொலீஜியம்' முறையை மக்கள் விரும்பவில்லை.. மாற்றணும்.. மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு பரபர கருத்து
நீதிபதிகள் பதவி உயர்வு
ஆனால், இந்த உத்தரவை பின்பற்ற மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் கொலிஜியம் சிபாரிசுகளுக்கு மத்திய அரசு வேண்டும் என்றே கால தாதமதம் செய்வதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நீதிபதிகள் பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அளித்த பரிந்துரைகளை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலிஜியம் அனுப்பிய கோப்புகள்
10 பேர் அடங்கிய விருப்ப பட்டியலலுடன் கொலிஜியம் அனுப்பிய கோப்புகளை கடந்த 25 ஆம் தேதி மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பட்டியலில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் தலைமை நீதிபதியான பிஎன் கிர்பால் மகனுமாகிய சவுரப் கிர்பால் பெயரும் இடம் பெற்று இருந்ததாக தெரிகிறது. கொலிஜியம் மீண்டும் வலியுறுத்திய சில பெயர்களையும் மத்திய அரசு திருப்பி அனுப்பி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உச்ச நீதிமன்றம் அதிருப்தி
முன்னதாக இந்த மாத துவக்கத்தில் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த கிர்பால், தான் கே என்பதாலே தனது நியமனம் மறுக்கப்படுவதாக கூறியிருந்தார். 2017 ஆம் ஆண்டு முதலே கிர்பாலுக்கு நீதிபதியாக பதவி உயர்வு வழங்குவது மறுக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற இது தொடர்பான வழக்கு ஒன்றின் போது, மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.
எல்லை மீறி செயல்படுகிறது
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலிஜியம் அளித்த பெயர்களில் சிலவற்றுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால், பணிமுதிர்வு அடிபடுகிறது. கொலிஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருத வேண்டுமே தவிர ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு நீதித்துறை பணிகளை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. இது போன்ற கிடப்பில் போட்டுக்கொண்டு மத்திய அரசு எல்லை மீறி செயல்படுகிறது.
முறையாக பின்பற்ற வேண்டும்
இந்த விவகாரத்தில் நீதிமன்றே முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளி விட வேண்டாம். சட்டம் இருக்கும் போது அதை முறையாக பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் ஆலோசனை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்" என்று உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.