ஜெ. சிகிச்சை-அதிமுக அரசு சொன்னதால் தான் சிசிடிவி அகற்றினோம்: உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை
டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது முந்தைய அதிமுக அரசு சொன்னதால்தான் சிசிடிவி கேமராக்களை அகற்றினோம் என்று உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் நடத்தும் விசாரணைக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் கிருஷ்ண முராரி அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.
மருத்துவ வல்லுநர்கள் குழு இல்லை
இன்றைய விசாரணையின் போது நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மீது அப்பல்லோ மருத்துவமனை அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தது. அப்பல்லோ மருத்துவமனை சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கூறியதாவது: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர்கள் வல்லுநர்கள் குழு எதுவும் இல்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை விசாரிக்கவில்லை. ஆனால் அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களை மட்டும் தொடர்ந்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு அழைக்கிறது.
ஆறுமுகசாமி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை
நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அந்த ஆணையத்தின் முன் அப்பல்லோ மருத்துவமனை சார்பாக யாரும் ஆஜராக மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு பிரைவசி தேவை என்பதால் அப்போதைய அதிமுக அரசு கேட்டுக் கொண்டதாலேயே மருத்துவமனையில் இருந்து சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டன. நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. தவறான தகவல்களை வேண்டுமென்றே ஊடகங்களுக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் கசியவிடுகிறது.
ஆறுமுகசாமி கமிஷனால் அவப்பெயர்
ஆறுமுகசாமி கமிஷன் அல்லாத மருத்துவர்கள் வல்லுநர்கள் அடங்கிய குழு முன்பாக விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறோம். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ வல்லுநர்கள் இல்லாத ஆறுமுகசாமி ஆணையம் எப்படி கேள்வி எழுப்ப முடியும்? நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தால் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவப்பெயர் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார்.
ஆறுமுகசாமி கமிஷனை கலைக்க கோரவில்லை
அப்போது, நீங்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை எதுவும் வைக்கவில்லைதானே? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அரியமா சுந்தரம், நாங்கள் ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. அந்த ஆணையத்தில் மருத்துவ துறை வல்லுநர்கள் இல்லை. அப்படியான நிலையில் எப்படி மருத்துவம் சார்ந்த விளக்கம் அளிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.