தலைநகர் டெல்லியில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு.. மருத்துவமனைகளில் காலியாகும் படுக்கைகள்
டெல்லி: கடந்த மாதம் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த டெல்லியின் நிலைமை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. பெரும்பாலான மருத்துவமனைகளில் காலி படுக்கைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
கொரோனா பரவலின் 2ஆம் அலை தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த மே மாதம் அதிகபட்சமாக நான்கு லட்சத்தைக் கடந்தது.
உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி
மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கொரோனா 2ஆம் அலையால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகம், கேரளாவில் கொரோனா 2ஆம் அலை பாதிப்பு அதிகரித்து வருகிறது.
டெல்லி கொரோனா 2ஆம் அலை
குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அங்கிருந்த பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகள் நிரம்பின. அங்கு கொரோனா உயிரிழப்புகள் ஒரு புறம் அதிகரித்தது. மறுபுறம் மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காமலும் சரியான நேரத்தில் வென்டிலெட்டர் உதவிகள் கிடைக்காமலும் கொரோனா நோயாளிகள் பலியான அவலங்களும் நடந்தன.
குறையும் கொரோனா பாதிப்பு
இந்நிலையில், தற்போது டெல்லியில் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. செவ்வாய்க்கிழமை டெல்லியில் 4,482 பேருக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. கடந்த ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பிறகு இது குறைவாகும். அதேபோல கொரோனா பாசிடிவ் விகிதமும் டெல்லியில் 6.89%ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த கொரோனா பரிசோதனைகளில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது என்பதே பாசிடிவ் விகிதம் எனப்படும்.
காலியாகும் படுக்கைகள்
டெல்லியில் கொரோனா 2ஆம் அலையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஐ.டி.பி.பி (இந்தோ-திபெத்திய எல்லை காவல்துறை) மற்றும் டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) மிகப் பெரிய கொரோனா சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா நோயாளிகளால் நிரம்பியிருந்த இந்த மையங்கள் தற்போது 50% காலியாக உள்ளன.
அவசர அழைப்புகள்
டெல்லியில் கொரோனா நோயாளிகளிடம் இருந்து பெறப்படும் அவசர அழைப்புகள் குறைந்துள்ளதாகக் கட்டுப்பாட்டு அறைக்கு பணிபுரியும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேநேரம் ஐசியு படுக்கைகளை வேண்டி வரும் அழைப்புகள் தொடர்வதாக அவர் தெரிவித்தார். மேலும், டெல்லியில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா குணமடைந்தவர்கள் விகிதம்
டெல்லியில் செவ்வாய்க்கிழமை கொரோனா குணமடைந்தவர்கள் விகிதம் (recovery rate) 94.37% ஆக இருந்தது. ஒரே நாளில் மட்டும் 9,403 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது டெல்லியில் 50,863 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். யமுனா விளையாட்டு வளாக கோவிட் பராமரிப்பு மையம், காமன்வெல்த் கிராம கோவிட் மருத்துவ மையம் ஆகியவற்றிலும் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
பாசிட்டிவ் விகிதம்
டெல்லியில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் அதிகபட்சமாக 40% வரை சென்றது. அப்போது அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளைச் சமாளிக்க ;டெல்லி முழுவதும் புதிய மருத்துவமனை வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது ஊரடங்கு காரணமாக டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கொரோனா படுக்கைகளும் அதிகம் காலியாகியுள்ளன.
கொரோனா உயிரிழப்புகள்
இருப்பினும், டெல்லியைப் பொறுத்தவரை கொரோனா உயிரிழப்புகள் முக்கிய பிரச்சினையாகவே உள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 265 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர், ஒட்டுமொத்தமாக டெல்லியில் மட்டும் இதுவரை 22,111 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.