மிஷன் குஜராத் ஓவர்! அடுத்த இலக்கு கர்நாடகாதான்.. ஆனால் வெற்றி சுலபமல்ல! காத்திருக்கும் மெகா சவால்கள்
டெல்லி: குஜராத்தில் பாஜக மிகப் பெரியளவில் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், அடுத்து மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றான கர்நாடகாவில் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.
குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் குஜராத்தில் 156 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அங்குத் தொடர்ந்து 7ஆவது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல காங்கிரஸ் கட்சியும் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல்முறை. கட்சியை மீண்டும் கட்டமைப்பும் முயற்சியில் இது நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும்.
கேடிஆர்க்கு ஸ்கெட்ச் போட்ட நல்லதம்பி! அவரும் இப்போ மாட்டிக்கிட்டார்! கட்டு கட்டாய் பணம்.. வீடியோ!
தேர்தல் வெற்றி
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் அதிகபட்சமாக 7 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்று இருந்தது. இந்த சாதனையைச் சமன் செய்யும் வகையில் இப்போது குஜராத்தில் மாபெரும் வெற்றி பாஜகவுக்குக் கிடைத்துள்ளது. குஜராத்தில் ஒரு கட்சி அதிகபட்சம் பெரும் இடங்கள் இதுதான். அதேபோல காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தி பிரசாரம் இல்லாமலேயே இமாச்சல பிரதேசத்தில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. இமாச்சல் பிரதேச வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் கூட, குஜராத்தில் அக்கட்சி மிக மோசமான தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
கர்நாடகா
இந்தச் சூழலில் அடுத்த 5 மாதங்களில் நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அங்கு ஆட்சியில் உள்ள மாநில பாஜக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். சித்தராமையாவால் அங்கு பாஜகவை வீழ்த்த முடிந்தால், அடுத்தாண்டு நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட தேர்தல் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு பூஸ்ட் தரும். இது 2024 மக்களவை தேர்தல் கூட்டணியைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கும்.
பாஜகவுக்கு ரொம்ப முக்கியம்
கர்நாடகாவை பாஜக ரொம்பவே முக்கியமாகக் கருதுகிறது. ஏனென்றால் தெற்கு மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். கர்நாடகாவைத் தென்மாநிலங்களுக்கான கேட்டாகவே பார்க்கும் பாஜக, அங்குத் தனது பிடியை இறுக்கமாக வைத்துக் கொள்ள முயல்கிறது. அங்குப் பிரதமர் மோடியின் இமேஜும் பாஜகவுக்கு வாக்குகளை வாங்கி தருகிறது. கடந்த 2019 தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 மக்களவை தொகுதிகளில் 25இல் பாஜக வென்றிருந்தது. காங்கிரஸ் கட்சியால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.
4 முதல்வர்கள்
கர்நாடகாவில் கடந்த 2018இல் நடந்த சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு மட்டும் 4 முறை முதல்வர்கள் மாறியுள்ளனர். முதலில் பதவியேற்ற எடியூரப்பா போதிய ஆதரவில்லாததால் சில நாட்களில் பதவி விலகினார். அடுத்து குமாரசாமி தலைமையில் அமைந்த காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசு வெறும் 14 மாதங்களில் கவிழ்ந்தது. பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமான நிலையில், எடியூரப்பா முதல்வராகப் பொறுப்பேற்றார். இருப்பினும், குடும்ப அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2021இல் அவரும் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராகக் கொண்டு வரப்பட்டார்.
கை கொடுக்குமா
குஜராத்தில் விஜய் ரூபானி மாற்றப்பட்டு புதிய முதல்வர் கொண்டு வரப்பட்டது எப்படி பாஜகவுக்குச் சாதகமாக அமைந்ததோ, அதேபோல கர்நாடகாவிலும் முதல்வர் மாற்றப்பட்டது பாஜகவுக்குப் பலனைத் தருமே என்று அக்கட்சி நம்புகிறது. ஆனால், இது 100% கர்நாடகாவில் வேலை செய்யும் எனச் சொல்ல முடியாது. மக்களவை தேர்தலில் மோடி என்ற இமேஜுக்கு வாக்குகள் கிடைத்தாலும் கூட சட்டசபைத் தேர்தலிலும் அதே நடக்கும் எனச் சொல்ல முடியாது. அதற்கு 2018 கர்நாடக தேர்தல் முடிவுகளே ஒரு சிறந்த உதாரணம். அப்போது மோடியின் பிரசாரம் கூட பாஜகவுக்கு வெற்றியைத் தரவில்லை.
காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் இருந்து அங்கு சில எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமானாலும் கூட, இன்னுமே காங்கிரஸ் அங்கு வலுவாகவே உள்ளது. சித்தராமையா மற்றும் டி.கே சிவக்குமார் தலைமையில் அங்கு இயங்கும் காங்கிரஸ் 2023இல் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் என்றே கூறுகிறது. பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில அரசை 40% கமிஷன் அரசு என்று காங்கிரஸ் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறது. இத்துடன் சிறுபான்மையினரின் வாக்குகளும் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறது காங்கிரஸ்
என்ன நடக்கும்
பசவராஜ் பொம்மை இருந்த வரை கர்நாடகாவில் பெரியளவில் மத ரீதியான மோதல்கள் ஏற்படாமலேயே இருந்தது. இருப்பினும், பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்ட பின், இந்துத்துவ அரசியல் அங்கு அதிகரித்துள்ளது. இது இந்துக்களின் வாக்கை அப்படியே பாஜகவுக்கு வாங்கி தரும் என பாஜக நம்புகிறது. ஹிஜாப், மசூதி ஒலிபெருக்கி, ஹலால் இறைச்சி எனத் தொடர்ச்சியாக அங்குச் சர்ச்சை நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எது பெற்றுத் தரும் என்பதை நாம் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.