Fact Sheet: இந்தியாவுக்கு ஜோபிடன்- கமலா ஹாரீஸ் நிர்வாகம் என்னென்ன உதவிகளை அனுப்பியது?
டெல்லி: இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்கா வரும் நாட்களில் 10 கோடி டாலர் மதிப்புள்ள அவசர கால உதவிகளை அனுப்பி வருகிறது.
அமெரிக்க மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் ஆக்ஸிஜன் உபகரணங்கள் மற்றும் இந்திய மருத்துவமனைகள் மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக அணிதிரண்டு முன்கள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்களை ஆதரிக்கின்றனர். அமெரிக்க அரசு உதவிப் பொருட்கள் ஏற்றிவரும் விமானங்கள் ஏப்ரல் 29, வியாழக்கிழமை இந்தியாவுக்கு வரத் தொடங்கி அடுத்த வாரமும் தொடரும்.
தொற்றுநோய் ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க மருத்துவமனைகள் சிரமப்பட்டபோது இந்தியா அமெரிக்காவிற்கு உதவி அனுப்பியது போலவே, இந்தியாவுக்கு உதவி தேவைப்படும் இந்த நேரத்தில் உதவ அமெரிக்கா உறுதியாக உள்ளது.

அமெரிக்க அரசின் உடனடி கோவிட்-19 உதவிகள் விபரம்:
அமெரிக்கா கீழ்காணும் உதவிகளை வழங்குகிறது:
ஆக்ஸிஜன் ஆதரவு: முதலில், 1,100 சிலிண்டர்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். அவைகளில் உள்ளூர் மையங்கள் மூலமாக தேவையானபோது ஆக்சிஜன் நிரப்பிக் கொள்ளலாம். கூடுதல் சிலிண்டர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மூலம் உள்ளூரில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி, இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்திய மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்.
ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 1,700 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் கொண்ட நடமாடும் வாகனங்கள் சுற்றுப்புறக் காற்றிலிருந்து ஆக்ஸிஜனைப் பெற்று, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் உதவும்.
ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள்: 20 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜனை வழங்கக்கூடிய ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவும் இடங்களில் கைகொடுக்கும். களத்தில் பணி புரியும் இந்திய மருத்துவர்களுடன் இணைந்து ஒரு அமெரிக்க வல்லுனர் குழு செயல்படும்.
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள்: நோயாளிகள் மற்றும் இந்திய சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்க 15 மில்லியன் என்-95 முகக்கவசங்கள்.
தடுப்பூசி-உற்பத்தி பொருட்கள்: அமெரிக்க அரசு, அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் உற்பத்தி செய்யும் தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான பொருட்களை இந்தியாவுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதன் பயனாக இந்தியா இரண்டு கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்க முடியும்.
விரைவான நோயறிதல் சோதனைகள்: கோவிட்-19 சமூக பரவலைக் கண்டறிந்து 15 நிமிடங்களுக்குள் நம்பகமான முடிவுகளை வழங்கி, பரவலைத் தடுக்கக் கூடிய பரிசோதனைக் கருவிகள் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய பரிசோதனைக் கருவிகள் பத்து லட்சம் இந்தியாவுக்கு வழங்கப்பட உள்ளன.
சிகிச்சை முறைகள்: மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் வகையில் முதல் தவணையாக 20,000 வைரஸ் தடுப்பு மருந்து ரெமெடிசிவர்.
பொது சுகாதார உதவி: அமெரிக்க மருத்துவ வல்லுனர்கள், இந்திய நிபுணர்களுடன் கைகோர்த்து ஆய்வகம், தொற்றுநோய், கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைமுறை மற்றும் மாடலிங் செய்வதற்கான பயோ இன்ஃபர்மேடிக்ஸ், தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, தடுப்பூசி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் செயல்படுவார்கள்.
தொற்றுகாலத் தொடக்கம் முதல் இந்தியாவுக்கு அமெரிக்க உதவிகள்:
கோவிட்-19 சவாலை சமாளிக்க அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவின் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 97 லட்சம் மக்களுக்கு பலதரப்பட்ட அமெரிக்க உதவிகள் சென்றடைந்துள்ளன. உயிர் காப்பு சிகிச்சை, மக்களுக்கான விழிப்புணர்வு பரப்புரைகள், நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், நெருக்கடிக்கால நடவடிக்கைகளுக்கு தயார் படுத்த புதிய நிதி திட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்:
சவாலை எதிர்கொள்ள ஆயிரம் இந்திய சுகாதார மையங்களை தயார் படுத்தும் வகையில் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள 14 ஆயிரம் பேருக்கு பயிற்சி.
கோவிட்-19 லிருந்து மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 2,13,000 மருத்துவர்கள், செவிலியர், சுகாதார உதவியாளர்கள், சமூகத் தொண்டர்கள், துப்புறவு பணியாளர்கள் ஆகியோரது பாதுகாப்பை உறுதி செய்ய உதவியது.
யூனிசெஃப் அமைப்புடன் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பரப்புரை 8.40 கோடி பேர்களை சென்றடைந்தது. தீவிர சிகிச்சை தேவைப்பட்ட நோயாளிகளுக்காக 15 மாநிலங்களில் உள்ள 29 சுகாதார மையங்களுக்கு 200 அதி நவீன வென்டிலேட்டர்கள் வழங்கியது.
அமெரிக்க-இந்திய சுகாதார கூட்டுறவு: ஏழு தசாப்தங்கள் வலுவானவை
கடந்த எழுபது ஆண்டுகளாக, அமெரிக்க அரசு மற்றும் அந்நாட்டின் பல்வேறு இதர சுகாதார அமைப்புகளையும் சேர்ந்த பொது சுகாதார வல்லுனர்கள் இந்திய அரசுடன் இணைந்து இந்தியாவின் பாதிக்கப்பட்ட சமூகங்கள் உள்ளிட்ட மக்களின் சுகாதார மேம்பாட்டுக்கு பணியாற்றி வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளில் சுகாதார மேம்பாட்டுக்கு வழங்கப்பட்ட 1.40 பில்லியன் டாலர் உதவி உள்ளிட மொத்தம் 2.80 பில்லியன் டாலர் அளவுக்கும் அதிகமாக அமெரிக்கா இந்தியாவுக்கு அயலக உதவி வழங்கியுள்ளது.
2010 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவும், இந்தியாவும் இதர நாடுகளுடன் இணைந்து புதிய ஹெச்.ஐ,வி. நோயாளிகளின் எண்ணிக்கையை 37% குறைத்துள்ளன.
1998 முதல் காசநோய்க்கு எதிராக அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் மூலமாக ஒன்றரை கோடி மக்கள் பலன் அடைந்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் இந்தியாவில் நான்கு கோடி கர்ப்பிணித் தாய்மார்கள் மிகவும் அவசியமான உடல்நல தகவல்களும், சேவைகளும் பெற அமெரிக்கா உதவியுள்ளது.
இந்தியா மற்றும் உலக சுகாதாரக் கழகத்துடன் இணைந்து இந்தியாவில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் நோய் அறி திறன் மேம்பாட்டுக்கு உரிய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.
அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து உலகளாவிய உயர் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக உலகத்தில் நோய்கள் பரவி அவை பெருந்தொற்றாக மாறாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.












Click it and Unblock the Notifications