ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடம்.. உ.பி 3-வது இடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) அறிக்கையின்படி பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீகாரில் அதிக ஏழைகள்
பீகாரில் 51.91 சதவீத மக்கள் ஏழைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜார்கண்டில் 42.16 சதவீதம் பேர் ஏழைகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் 4-வது இடத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் 36.65 சதவீதம் ஏழைகளும் உள்ளனர் என்று நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் கூறப்பட்டுள்ளது.

கேரளா இதில் முதலிடம்
மேகாலயா 32.67 சதவீத ஏழைகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முழுவதும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவா மாநிலம் உள்ளது. தொடர்ந்து சிக்கிம், தமிழ்நாடு ஆகியவை குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் உள்ளன.

தமிழ்நாடு எத்தனை?
கேரளாவில் 0.71 சதவீதம் ஏழைகள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4.89 சதவீதம் ஏழைகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 3.76 சதவீதம் ஏழைகள், சிக்கிமில் 3.82 சதவீத ஏழைகள், பஞ்சாபில் 5.59 சதவீத ஏழைகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை புதுச்சேரி மக்கள் தொகையில் 1.72 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர்,

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
லட்சத்தீவுகள் (1.82 சதவீதம்), அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (4.30 சதவீதம்) மற்றும் டெல்லி (4.79 சதவீத ஏழைகள் உள்ளனர். பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறனர் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications