அடடா.. ரயில் நிலைய கழிவறைக்கு 12% ஜிஎஸ்டி! 2 பிரிட்டிஷ்காரர்களிடம் ரூ.224 வசூல்! ஐஆர்சிடிசி விளக்கம்
டெல்லி: டெல்லி ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கழிவறையை 5 நிமிடம் பயன்படுத்திய பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகள் 2 பேரிடம் இருந்து 12 சதவீத ஜிஎஸ்டியுடன் ரூ.224 வசூலிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு ஐஆர்சிடிசி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் கூட பாக்கெட் வகை உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இதற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தான் இந்திய ரயில்வேயின் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் கழிவறையை பயன்படுத்திய 2 பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளுக்கு ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்பட்டு சர்ச்சையான நிலையில் அதற்கு ஐஆர்சிடிசி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
நல்லா பாருங்க.. இதுதான் டெல்லி ரயில் நிலையம்.. பளபளன்னு கண்ணாடி மினுங்க.. வெளியான படம்!
2 பிரிட்டிஷ்காரர்கள் வருகை
பிரிட்டிஷ்காரர்களான 2 சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் டெல்லியிலிருந்து கதிமான் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்துக்கு சென்றனர். அங்கு சுற்றுலா வழிகாட்டி அவர்களை வரவேற்றார். இதையடுத்து சுற்றுலா பயணிகள் 2 பேரும் கழிவறை பயன்படுத்த விரும்பியுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரும் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிவறையை பயன்படுத்தினர்.
ஜிஎஸ்டியுடன் ரூ.224 வசூலிப்பு
இந்நிலையில் தான் கழிவறையை பயன்படுத்திய இருவரிடமும் 12 சதவீத ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.224 ஐஆர்சிடிசி சார்பில் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரயில் நிலையங்களில் ஓய்வறையில் கழிவறையை பயன்படுத்தினால் ஜிஎஸ்டியுடன் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்திகள் பரவின. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐஆர்சிடிசி விளக்கம்
இந்நிலையில் தான் ஐஆர்சிடிசி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‛‛ரயில் நிலையங்களின் காத்திருப்பு அறைகளில் கழிவறைகளை பயன்படுத்துவதற்கு தனியாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்ற செய்தி தவறானது. மாறாக ரயில் நிலையங்களில் எக்ஸிகியூட்டிவ் ஓய்வறைகளை ஐஆர்சிடிசி நிர்வகித்து வருகிறது. இதனை பயன்படுத்துவதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்ந்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
எக்ஸிகியூட்டிவ் ஓய்வறை பயன்பாடு
ஆக்ரா கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் பிரிட்டிஷ் பயணிகள் இருவரும் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் கழிவறையை பயன்படுத்தினர். சிறுநீர் கழிக்க கழிவறையை பயன்படுத்தியதற்காக ஒருவரிடம் ரூ.100 என 2 பேரிடம் மொத்தம் ரூ.200ம், இருவருக்கும் தலா 12 சதவீத ஜிஎஸ்டியாக மொத்தம் ரூ.24ம் வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொத்தம் 224 வசூலிக்கப்பட்டுள்ளது'' என விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
5 நிமிடத்துக்கு கட்டணமா?
ஐஆர்சிடிசி சார்பில் கூறுகையில், ‛‛மேலும் 5 நிமிடம் கழிவறையை பயன்படுத்தியதற்கு இருவருக்கும் ரூ.224 வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதிலும் எந்த விதிமீறலும் இல்லை. எக்ஸிகியூட்டிவ் லவுஞ்சை பயன்படுத்துவதற்கு ஒரு நபருக்கு 2 மணிநேரத்துக்கான நுழைவு கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 12 சதவீத ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இதன்மூலம் பயணிக்கு குளிரூட்டப்பட்ட அறை வசதி, தொலைக்காட்சி, சாய்வு இருக்கை, இலவச தண்ணீர், இலவச வைபை, டீ, காபி, கழிவறை வசதிகளை பயணிகள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் சில வசதிகளை க்ஷ பயணிகள் பயன்படுத்தாமல் இருந்தாலும் கூட அதே கட்டணம் தான் வசூலிக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.