2 நாள் யாகம்.. நல்லநேரம் ரொம்ப முக்கியம்.. பாஜகவை வீழ்த்த டெல்லியில் கேசிஆர் செய்த சம்பவம்! என்னவாம்?
டெல்லி: பாஜகவை எதிர்க்கும் வகையில் தேசிய அரசியலில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் நுழைந்துள்ளார். இதற்காக பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கி தலைமை அலுவலகத்தில் தலைநகர் டெல்லியில் திறந்துள்ளார். இந்நிலையில் தான் ஒவ்வொரு விஷயத்தையும் நல்ல நேரம் பார்த்து செய்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி விசேஷமாக 2 நாள் மகாயாகம் நடத்தியதும், அதன் பின்னணி தகவலும் வெளியாகி உள்ளது.
தெலங்கானாவில் கே சந்திரசேகர ராவின்(கேசிஆர்) தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கிடையே தான் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பாஜக இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. ஒருகாலத்தில் கூட்டணியில் இருந்த இந்த கட்சிகள் எதிரெதிர் துருவங்களாக மாறி உள்ளன.

மோடியை சாடும் கேசிஆர்
குறிப்பாக பிரதமர் மோடியை, சந்திரசேகரராவ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் பிரதமர் மோடி தெலங்கானா சென்றாலும் கூட அவரை வரவேற்க செல்லாமல் தொடர்ந்து சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருகிறார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் கூட்டணி அமைக்க சந்திரசேகர ராவ் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் கட்சி அலுவலகம் திறப்பு
இந்நிலையில் தேசிய அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் தசரா தினத்தில் சந்திரசேகரராவ் ‛பாரத் ராஷ்ட்ர சமிதி' (பிஆர்எஸ்) கட்சியை துவக்கினார். இதன்மூலம் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வரும் நாட்களில் பாரத் ராஷ்ட்ர சமிதி என்ற பெயரில் செயல்பட உள்ளது. இந்நிலையில் தான் டெல்லியில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைமை அலுவலகத்தை சந்திரசேகர் ராவ் நேற்று திறந்து வைத்தார். இந்த அலுவலகம் டெல்லி சர்தார் படேல் மார்க் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.

நல்ல நேரம் பார்த்து செயல்பாடு
இந்நிலையில் தான் திறப்பு விழாவின்போது ஒவ்வொரு விஷயங்களையும் நல்ல நேரம் பார்த்து சந்திரசேகரராவ் செய்துள்ளது தெரியவந்துள்ளது. அதன்படி வேதமந்திரங்கள் முழங்க அவர் அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பிறகு நல்லநேரமான நேற்று மதியம் 12.37 மணிக்கு அவர் கட்சியை கொடியை ஏற்றினார். அதன்பிறகு 12.43 மணிக்கு நாற்காலியில் அமர்ந்த அவர் அதன்பிறகே கட்சி சார்ந்த நிர்வாகிகளின் நியமன கடிதங்களில் கையெழுத்திட்டார்.

2 நாள் யாகம் ஏன்?
முன்னதாக கட்சி அலுவலகத்தில் ராஜ ஷியாமளா யாகம் நேற்று 2வது நாளாக நடந்தது. இதிலும் சந்திரசேகரராவ் பங்கேற்றார். ராஜ ஷியாமளா யாகம் என்பது செல்வம் கொழிக்கவும், எதிரிகளின் பலம் குறைந்து அரசியலில் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தற்போது சந்திரசேகரராவ் இந்த யாகத்தை செய்துள்ளார். முன்னதாக பல புராணங்களில் ராஜசூய யாகம் என்ற வார்த்தைகளை நாம் கேட்டு இருக்கலாம். ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் கைப்பற்றும் முனைப்பில் பல்வேறு அரசர்கள் இதனை மேற்கொள்வார்கள். இந்த ராஜசூய யாகம் தொடர்பான குறிப்புகள் மகாபாரதத்தில் உள்ள நிலையில் அதன் வரிசையில் தான் இந்த ராஜ ஷியாமளா யாகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியினர் பங்கேற்பு
இந்த கட்சி அலுவலக திறப்பு விழாவில் இந்த கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சியில் பாஜகவுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதன்படி கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனும், கர்நாடகா முன்னாள் முதல்வருமான ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக உள்ள சமாஜ்வாடியின் அகிலேஷ் யாதவ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இவர்கள் தவிர பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ஒடிசா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications