ரயில்வே, ஐடிக்கு அஷ்வினி.. கல்வித்துறை தர்மேந்திர பிரதான்.. சிந்தியாவிற்கு விமானத்துறை ஒதுக்கீடு!
டெல்லி: ரயில்வேத்துறை மற்றும் ஐடி துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ், கல்வித்துறை அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.
இதற்கு முன் மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அஷ்வினி வைஷ்ணவ்
பிரதமர் மோடி அமைச்சரவையில் தற்போது 36 பேர் புதுமுகங்கள் அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். அஷ்வினி வைஷ்ணவ் மத்திய ரயில்வே துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட துறையாகும். அதேபோல் ரவிசங்கர் பிரசாத் பதவி வகித்த ஐடி துறை இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜக சார்பாக இவர் ஒடிசாவில் இருந்து ராஜ்ய சபாவிற்கு தேர்வாகி இருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரியாக இவர் பணியாற்றிவர். ஆட்சியர் பணியில்இருந்து ஓய்வு பெற்றபின் இவர் பாஜகவில் இணைந்தார்.

ஜோதிராதித்ய சிந்தியா
விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார். ஹவுஸ் ஆப் சிந்தியா எனப்படும் குவாலியர் பகுதியை ஆண்ட சிறு மன்னர் குடும்பத்தின் வாரிசுதான் ஜோதிராத்திய சிந்தியா. காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 வருடங்களாக மிக முக்கியமான உறுப்பினராக இருந்தார். கடந்த வருடம் மத்திய பிரதேசத்தில் காங்கிரசின் கமல் நாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்துவிட்டு பாஜகவில் இணைந்து ராஜ்ய சபா எம்பி ஆனார். அப்போதே ஜோதிராத்திய சிந்தியாவிற்கு முக்கிய அமைச்சரவை பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அனுராக் தாக்கூர்
மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சராக அனுராக் தாக்கூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தவர். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முக்கிய பொருளாதார கொள்கைகளை வகுத்ததில் முக்கிய பங்கு வகித்தார். இமாச்சல பிரதேசத்தின் ஹமிர்பூர் லோக்சபா தொகுதியில் இருந்து இவர் எம்பி ஆனது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திரா பிரதான்
தர்மேந்திரா பிரதான் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் பொக்ரியால் பதவி விலகிய நிலையில் இவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார். இவர் ஸ்டீல் துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். கூடுதலாக கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications