பை பை... திடீரென சரிந்த கொரோனா பாதிப்பு! ஆனால் சிகிச்சையில் மட்டும் இத்தனை பேரா? முழு விபரம் இதோ!
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில் நேற்றைய பாதிப்பை விட இன்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதன்படி சுமார் 13,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.
'பிஏ2.75’ இந்தியாவில் பரவும் புதிய கொரோனா! இத்தனை மாநிலங்களில் பாதிப்பா? எச்சரித்த இஸ்ரேல் விஞ்ஞானி!
கொரோனா பாதிப்பு
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
திடீர் சரிவு
இந்நிலையில் இந்தியாவில் நேற்று முன்தினம் 16 ஆயிரத்து 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், நேற்று 16 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை திடீர் சரிவை சந்தித்த நிலையில், 13 ஆயிரத்து 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 18 ஆயிரத்து 564 ஆக அதிகரித்துள்ளது.
குறைந்த பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தி ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 242ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 20க்கும் மேல் என்ற அளவிலேயே இருந்த நிலையில், தற்போது மிக லேசாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 12,456 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது.
தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 14 ஆயிரத்து 475 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தியாவில் இதுவரை 197கோடியே 99 லட்சத்து 29 ஆயிரத்து 208 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 101 கோடியே 71லட்சத்து 14 ஆயிரத்து 560 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 91,70,17,469 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 ஆயிரத்து 57 லட்சத்து 97 ஆயிரத்து 179 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.