30 நாட்களில் உயிரிழந்திருந்தால் மட்டுமே 'கொரோனா இறப்பு' சான்றிதழ்.. மத்திய அரசு அளித்த புது விளக்கம்
டெல்லி: கொரோனா இறப்பு சான்றிதழ்கள் வழிமுறைகளை வகுக்க மத்திய அரசு காலதாமதம் செய்வதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், இது குறித்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கொரோனா உறுதி செய்யப்பட்டு 30 நாட்களில் ஒருவர் உயிரிழந்திருந்தால் அது கொரோனா மரணமாகக் கருதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
தினசரி வைரஸ் பாதிப்பு 4 லட்சத்தைக் கடந்து சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது.

கொரோனா மரணங்கள்
கொரோனா 2ஆம் அலை சமயத்தில் உயிரிழந்தோருக்கு வழங்கப்பட்ட இறப்பு சான்றிதழ்களில் பெரும் குழப்பம் நிலவியது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணமாக வேறு காரணங்கள் குறிப்பிட்டிருந்ததால் பொதுமக்கள் குழப்பமடைந்தனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளைக் காக்கப் பல மாநில அரசுகளும் திட்டங்களை அறிவித்துள்ளன. எனவே, இறப்பு சான்றிதழ்களில் கொரோனா மரணம் எனக் குறிப்பிடவில்லை என்றால் அரசின் உதவித்தொகையைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என்றும் அஞ்சப்பட்டது.

உச்ச நீதிமன்றம் அதிருப்தி
இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. கொரோனா இறப்பு சான்றிதழ் வழிகாட்டுதல்களைத் தயார் செய்து வருவதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறி வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள், மத்திய அரசு கொரோனா இறப்பு சான்றிதழ் வழிகாட்டுதல்களை வெளியிடும் முன் 3ஆம் அலையே தாக்கிவிடும் எனக் கடுமையான கருத்துகளைக் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர். இந்தச் சூழலில் கொரோனா இறப்பு சான்றிதழ் குறித்த விரிவான வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ளது.

பிரமாண பத்திரம்
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், "RT PCR சோதனை, molecular சோதனை, ரேப்பிட் ஆன்டிஜென் சோதனை, மருத்துவர்களால் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தாலும் கூட அவர் தற்கொலை, கொலை மற்றும் விபத்து போன்றவற்றால் உயிரிழந்திருந்தால், அவை கொரோனா உயிரிழப்புகளாகக் கருதப்படாது, மருத்துவமனை அல்லது வீடுகளில் உயிரிழந்த நோயாளிகளுக்கு, Medical Certificate of Cause of Deathஇன் Form 4 மற்றும் 4 A வழங்கப்பட்டிருந்தால் அது கொரோனா மரணங்களாகக் கருதப்படும்.

30 நாட்கள்
95% கொரோனா உயிரிழப்புகள் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 25 நாட்களில் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் தெரிவிக்கின்றன. இதனால் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பிறகு 30 நாட்களில் அவர் உயிரிழந்திருந்தால் மட்டுமே அது கொரோனா உயிரிழப்பாகக் கருதப்படும். வீடு அல்லது மருத்துவமனை என எங்கு உயிரிழப்பு ஏற்பட்டிருந்தாலும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

மாவட்ட அளவிலான கமிட்டி
அதேநேரம் நோயாளி ஒருவர் கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து, அவர் 30 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்திருந்தால், அது கொரோனா மரணமாகக் கருதப்படும். இந்த காரணங்கள் இல்லாமல் ஒருவர் உயிரிழந்திருந்தால் அது கொரோனா மரணமாகக் கருதப்படாது. இருப்பினும் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா மரணம் எனக் கருதினால் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். அதன் பிறகு அந்த மரணம் குறித்து ஆராய மாநில அரசுகள் மாவட்ட அளவிலான கமிட்டியை அமைக்க வேண்டும். அந்த மரணத்திற்கான காரணத்தை ஆய்வு செய்து 30 நாட்களில் தீர்வு அளிக்கப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications