மருத்துவ படிப்பு: அகில இந்திய கோட்டாவில் ஓபிசி மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு- மத்திய அரசு ஒப்புதல்!
டெல்லி: மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) 27% இட இடஒதுக்கீடு; உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10% இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே அமல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மிக நீண்டகால அனைத்து கட்சிகளின் போராட்டத்துக்கு இது மிகப் பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீடு என்பது தனியாக உள்ளது. எம்.பி.பி.எஸ் படிப்பில் 15%; இதர மருத்துவ படிப்புகள் அனைத்திலும் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.
பொதுவாக மாணவர் சேர்க்கைகளில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது; ஆனால் அகில இந்திய ஒதுக்கீடுகளில் அரசியல் சாசனம் வழங்கிய மண்டல் கமிஷன் பரிந்துரைப்படியான 27% இட ஒதுக்கீட்டை ஓபிசியினருக்கு மத்திய அரசு கடந்த பல ஆண்டுகளாக மறுத்து வந்தது. ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு மட்டும் சரியாகவும் பின்பற்றப்பட்டு வந்தது.
2 சமோசா எவ்வளவு?.. ரூ. 20 கொடு.. 15 தானே.. அடுத்து நடந்த பயங்கரம்.. மனிதாபிமானமே இல்லையா!
ஓபிசி மாணவர்கள் பாதிப்பு
மத்திய அரசின் இந்த அணுகுமுறையால் ஓபிசி மாணவர்களில் 10,000க்கும் மேற்பட்டோரின் மருத்துவ படிப்பும் பாழாய் போனது. இதனை எதிர்த்து தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரல் கொடுத்தன. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் தொடர்ந்தன.
தமிழகம் வழக்கு
அத்துடன் மருத்துவ மேற்படிப்புகளில் பாதிக்கப்பட்டுள்ள ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரியும் உச்சநீதிமன்றத்தில் திமுக, பாமக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
ஹைகோர்ட் தீர்ப்பு
இதனடிப்படையில் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓபிசி மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை மறுப்பது நியாயம் இல்லை; 27% இடஒதுக்கீடு பெறுவதற்கு ஓபிசி மாணவர்களுக்கு உரிமை உண்டு என கடந்த ஆண்டு அதிரடி தீர்ப்பளித்தது. ஆனாலும் மத்திய அரசு சாக்கு போக்குகளை கூறி கடந்த ஆண்டு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் இருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
இதனையடுத்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒரு வார காலம் மத்திய அரசு அவகாசம் கோரியிருந்தது.
திடீரென ஒப்புதல்
இந்த நிலையில்தான் இன்று மத்திய அரசு திடீரென மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 27%; உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்தமான நீண்டகால போராட்டத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.