இந்தியாவில் கருத்துரிமை சுதந்திரம் ஜனநாயக பாரம்பரியம்.. டுவிட்டர் கருத்து தவறானது மத்திய அரசு பதிலடி
டெல்லி: இந்தியாவில் கருத்துரிமை சுதந்திரம் என்பது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், டுவிட்டரின் கருத்து தவறானது; முற்றிலும் ஆதாரமற்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாக டிவிட்டர் புகார் கூறிய நிலையில் மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது.

வாட்ஸ்-அப் மறுப்பு
புதிய விதிமுறைகளை செயல்படுத்த இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் வழங்கியது. இந்த காலஅவகாசம் முடிந்துள்ள நிலையில் பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தன. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த வாட்ஸ்-அப் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மத்திய அரசு விளக்கம்
'மத்திய அரசின் புதிய விதிமுறை மக்களின் உரிமையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். நிறுவனம் ரகசியமாக்கப்பட்ட செய்திகளை அணுக அனுமதிப்பது தனியுரிமை பாதுகாப்புகளை குலைக்கும் 'என்று கோர்ட்டில் கூறியது. ' புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் தனியுரிமைக்கான உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை. தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமையை மதிக்கிறோம்' என்று வாட்ஸ் அப்-க்கு மத்திய அரசு விளக்கம் கொடுத்தது.

டுவிட்டர் பகிரங்க குற்றச்சாட்டு
ஏற்கனவே டூல்கிட் விவகாரம் தொடர்பாக முக்கிய சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டரும், மத்திய அரசும் குடுமிப்பிடி சண்டை போட்டு வருகின்றன. மத்திய அரசின் புதிய விதிமுறைகளை ஏற்க மறுத்த டுவிட்டர் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், இந்தியாவில் பணியாற்றும் டிவிட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைவதாகவும் டிவிட்டர் நிறுவனம் கூறியது.

மத்திய அரசு பதிலடி
இவ்வாறு இருதரப்புக்கும் இடையேயான சண்டை முற்றிலுள்ள நிலையில் டுவிட்டருக்கு மத்திய அரசு சுடச்சுட பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் கருத்துரிமை சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் பாரம்பரிய நடைமுறையாகும். டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பும் மக்களை இந்திய அரசு மதிக்கிறது. தனியுரிமைக்கான உரிமையை அரசு சமமாக மதிக்கிறது.

டுவிட்டரின் கருத்து தவறானது
டுவிட்டரின் கருத்து முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானதாகும். டுவிட்டரின் கருத்து இந்தியாவை இழிவுபடுத்தும் முயற்சியாகும். டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடக ஊழியர்களுக்கு இந்தியா எப்போதும் பாதுகாப்பாக இருக்கும். அவர்களுக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் இல்லை. சட்டத்தை உருவாக்குதல் மற்றும் கொள்கை வகுத்தல் ஆகியவை இறையாண்மையின் ஒரே உரிமையாகும். டுவிட்டர் ஒரு சமூக ஊடக தளமாகும். இந்தியாவின் சட்டக் கொள்கை கட்டமைப்பை ஆணையிடுவதில் அதற்கு எந்த உரிமையும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications