ஆக்சிஜன் உயிரிழப்பு இல்லை என மத்திய அரசு கூறுவது சுத்த பொய்..ஆதாரத்துடன் வெளுத்து வாங்கும் சத்தீஸ்கர்
டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தரவுகளையும் மத்திய அரசு கேட்டுப் பெறவில்லை என தெரிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, ஆக்சிஜன் பற்றாக்குறை உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசின் அறிக்கை தவறாக உள்ளதாக விமர்சித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்போது தான் வைரஸ் பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.
அப்போது தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது. அதேபோல கொரோனா உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை சென்றது.

கொரோனா 2ஆம் அலை
கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியது. சரியான நேரத்தில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல் மக்கள் பெரும் இன்னலை எதிர்கொண்டனர். இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என மத்திய அரசு கடந்த ஜூலை 20ஆம் தேதி மாநிலங்களவையில் தெரிவித்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தது.

மோசமான நிர்வாகம்
இது குறித்து சத்தீஸ்கர் மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் டி எஸ் சிங் தியோ கூறுகையில், "ஒவ்வொரு மாநிலத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டன என்பது குறித்து எந்தவொரு தரவுகளையும் மத்திய அரசு கேட்கவில்லை. இப்படி எந்தவொரு தரவுகளையும் கேட்காமல் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனது மோசமான நிர்வாகத்தை மறைக்க மத்திய அரசு எடுத்துள்ள முயற்சி தான் இது.

மறுபரிசீலனை
ஆக்சிஜன் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. எங்கள் மாநிலத்தின் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 388 டன். கொரோனா உச்சத்தில் இருந்த போதும் எங்களுக்குத் தினசரி 180 டன் ஆக்சிஜன் தான் தேவைப்பட்டது. ஆனாலும்கூட நாங்கள் எங்கள் கொரோனா உயிரிழப்பு தொடர்பான தரவுகளை மீண்டும் மறுபரிசீலனை செய்கிறோம்.

மத்திய அரசு
மருத்துவமனைகளில் மட்டுமில்லை, மற்ற இடங்களிலும்கூட கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதாவது நிகழ்ந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்கிறோம். இதன் மூலம் கொரோனா பாதிப்பு குறித்தும் உயிரிழப்புகள் குறித்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல போல நாடு முழுவதும் மத்திய அரசு தனது சிறப்புக் குழுக்கள் அனுப்பி ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏன் ஆய்வு செய்யக் கூடாது?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications