கொரோனா 2ஆம் அலையால் ஆபத்தில் சிறார்கள்.. முழு தரவுகளை திரட்ட அதிகாரிகளுக்கு.. பிரதமர் அறிவுறுத்தல்
டெல்லி: உருமாறிய கொரோனா வைரசால் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் சிறார்கள் குறித்த தரவுகளைச் சேகரிக்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் உரையாடினார். அப்போது கொரோனா 2ஆம் அலையில் இளைஞர்களும் சிறார்களும் அதிக ஆபத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக இளைஞர்கள், சிறார்கள் அதிக ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளனர். இது கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, நாம் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்கள், சிறார்கள் மத்தியில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது குறித்த தரவுகளைச் சேகரிக்குமாறும் அவர் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தடுப்பூசி வீணாக்கப்படுவது பற்றிப் பேசிய அவர், "தடுப்பூசி வீணடிக்கப்படுவது இங்கு பெரும் பிரச்சினை உள்ளது. தடுப்பூசி வீணாகாமல் இருப்பதை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் அதிகாரிகள் அனைவரும் இதை முறையாகக் கண்காணிக்க வேண்டும்.
இந்தியாவில் ஒருபுறம் அதிகரிக்கும் கொரோனா.. மறுபுறம் தொடர்ந்து குறையும் தடுப்பூசி பணிகள்..காரணம் என்ன
வீணாக்கப்படும் ஒவ்வொரு தடுப்பூசிக்கும் ஒருவர் ஆபத்தில் தள்ளப்படுகிறார் என்பதை நாம் உணர வேண்டும். எனவே, தடுப்பூசி வீணடிப்பதை நிறுத்துவது மிக முக்கியமானது. இதை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும்.
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிய வருவதால் அதைத் தடுக்க நமது அணுகுமுறைகளும் அதற்கு ஏற்றவாறு தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். இந்த புதிய சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒரே நாடாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.