பிரியங்கா பேட்டி ஓராண்டு பழையது...ராகுல் காந்திதான் தலைவர்...பாஜக மீது காங்கிரஸ் பாய்ச்சல்!!
டெல்லி: ''காந்தி குடும்பத்தில் இல்லாமல் கட்சியில் இருந்து வேறு யாராவது காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்'' என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாக செய்தி வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி, தற்போது பாஜக தூண்டுதலில் செய்தியாக வெளி வந்து கொண்டு இருக்கிறது என்று அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரியங்கா காந்தி 2019, ஜூலை ஒன்றாம் தேதி அளித்திருந்த பேட்டியில், ''காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை நான் ஏற்க மாட்டேன். எனக்கு அதில் விருப்பமும் இல்லை. தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்ததற்கு மரியாதை அளிக்கிறோம். அதேபோல், குடும்ப உறுப்பினர்கள் யாரும் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்க கூடாது என்று கூறி இருந்ததையும் வரவேற்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டியை அவர் சமீபத்தில் கொடுத்தது போல் செய்தியாக்கி வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு இன்று பதில் அளித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா, ''கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியங்கா காந்தி அளித்திருந்த பேட்டியை பாஜக பின்னணியில் ஊடகங்கள் திடீரென குதித்து செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. இன்றைய அரசியலில் மோடி-ஷா இருவரின் போக்கை எதிர்த்து பயமின்று முன்னணியில் போரிடுவதுதான் எங்களது குறிக்கோள்.
சென்னையில் வெளுத்த 'அதே பேய் மழை'.. டெல்லியை புரட்டி போட்ட 'புதன்'.. அதிர வைக்கும் காட்சிகள்
அதிகாரத்தை கொஞ்சமும் லட்சியம் செய்யாமல், காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பம் பணியாற்றி வருகிறது. இதற்கு உதாரணமாக சோனியா காந்தி இருக்கிறார். கட்சிக்கு சேவை மட்டுமே செய்து அதிகாரத்தை தியாகம் செய்துள்ளார். 2019ல் ராகுல் காந்தி நம்பிக்கை மற்றும் தைரியத்தை வரவழைத்து தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சிக்கு தொடர்ந்து ராகுல் காந்தி சோர்வில்லாமல் உழைத்து வருகிறார். தொடர்ந்து ஆளும்கட்சியுடன் தனது வாதத்தை முன் வைத்து போராடி வருகிறார். தனது கருத்துக்கள் மூலம் மோடி அரசின் தவறுகளை எடுத்து வைத்து பாஜக அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். இந்த அச்சமற்ற, சமரசம் செய்து கொள்ள முடியாத தைரியத்தைதான் இன்று நாடே ஏதிர்பார்க்கிறது. காங்கிரஸ் தொண்டர்களும் மதிக்கின்றனர்.
2019ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பின்னர் சில மாதங்களில் பிரியங்கா காந்தி பேட்டி அளித்து இருந்தார். தற்போது கட்சிக்கு பிரபல முகம் தேவைப்படுகிறது என்ற விவாதம் எழும்போது, பிரியங்காவின் பேட்டியும் செய்தியாகி பரபரப்பை அதிகரித்து வருகிறது.