விவசாய சட்டங்கள் பற்றி தவறான தகவல்.. மக்களை ஏமாற்றும் காங்கிரஸ்.. நரேந்திர சிங் தோமர் குற்றச்சாட்டு
டெல்லி: விவசாயிகள் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் எனப் பொய்யான பரப்புரையை காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகரின் அனைத்து வாயில்களையும் முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விவசாய சட்டங்கள் அமலுக்கு வரும்போது மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிறுத்திக்கொள்ளும் என்பது போன்ற தகவல்கள் பரவின. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு தேவை என்றும் விவசாயிகள் தரப்பும் வலியுறுத்தின.
காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது
இந்நிலையில், வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விவசாயிகள் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிறுத்தப்படும் என பொய்யான பரப்புரையைக் காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "விவசாயிகளின் நலனின் அக்கறை கொண்டு மத்திய அரசு விவசாய சீர்திருத்தச் சட்டங்களை இயற்றியுள்ளது. ஆனால், மக்களிடையே தனது ஆதரவை இழந்து வரும் காங்கிரஸ், தொடர்ச்சியான பொய்கள் மூலம் நாட்டு மக்களை தவறாக வழிநடத்த முயல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
என்ன தவறு
மேலும் அவர், "காங்கிரஸ் எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் குறித்துப் பொய் சொல்கிறார்கள். காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங் பிட்டு விவசாய சட்டம் குறித்து பொய்யான தகவல்களை வழங்கியபோது, அதை அமைச்சர் அனுராக் தாக்கூர் உடனடியாக அம்பலப்படுத்தினார்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன் நாடாளுமன்றத்தில் பேசிய போதும், விவசாய சட்டங்களில் என்ன தவறு உள்ளது என்பது குறித்து காங்கிரஸ் கூற வேண்டும் என்றே நரேந்திர சிங் தோமர் தெரிவித்திருந்தார்.
சட்டம் தேவை
முன்னதாக, இது குறித்தி விவசாயச் சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "நாங்கள் எங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிறுத்திக் கொள்கிறது என்று கூறவில்லை. அதை உறுதி செய்யச் சட்டம் ஒன்று வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. இது விவசாயிகளுக்குப் பெரியளவில் நன்மையைத் தரும். இப்போது குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யச் சட்டம் எதுவும் இல்லை. இதன் காரணமாகவே வியாபாரிகளிடம் விவசாயிகள் ஏமாறுகின்றனர்" என்று தெரிவித்திருந்தார்.
உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. கடைசியா நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை 18 மாதங்கள் வரை நிறுத்தி வைக்க தாயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், விவசாய சட்டங்களை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.