குடியுரிமை சட்ட போராட்டத்துக்கு எதிரான ராணுவ தளபதி பேச்சு.. கடும் சர்ச்சை! எதிர்க்கட்சிகள் கொதிப்பு
டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான வன்முறை தொடர்பாக ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியது கடும் சர்ச்சையாகி வருகிறது. ஒரு ராணுவ தளபதி எப்படி அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொதிக்கின்றன.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடந்த வன்முறையில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ளனர். வன்முறை தொடர்பாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அவர் டெல்லியில் இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், "தலைமை என்பது எல்லாவற்றையும் முன்னின்று நடத்துவது, நீங்கள் முன்னேற்றத்திற்கான விஷயங்களை நோக்கி செல்லும் போது, இதையே எல்லோரும் பின்பற்றுவார்கள்
வன்முறை பாதை
மக்களை சரியான திசையில் வழிநடத்துகிறவர்களே தலைவர்கள். மக்களை தவறான திசைகளில் வழிநடத்துபவர்கள் தலைவர்கள் அல்ல. இதற்கு சாட்சியாக இருப்பது பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள். அவர்களை நம் நகரங்களிலும் தீ மற்றும் வன்முறைகளைச் செய்வதற்கு வழிநடத்துகிறார்கள். அப்படி நடத்துகிறவர்கள் தலைவர்களே அல்ல" என்று தெரிவித்திருந்தார்.
எதிர்க்கட்சிகள்
ராணுவ தளபதியின் இந்த பேச்சு சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. நாட்டின் ராணுவ தளபதி எப்படி அரசியல் தொடர்பாக கருத்து தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றன.
ஜனநாயகத்துக்கு எதிரானது
காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலாப்பா இது பற்றி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ராணுவத் தலைவர் பிபின் ராவத் குடியுரிமைதிருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு எதிராக பேசுவது முற்றிலும் அரசியலமைப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது. இன்று அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ராணுவத் தளபதியை அனுமதித்தால், நாளை ராணுவமே அரசை கையகப்படுத்துவதற்கான முயற்சிக்கு அனுமதித்துவிடும்" என்று தெரிவித்துள்ளார்.
ஒருமைப்பாடு
ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், தலைமை என்பது ஒருவரின் அலுவலகத்தின் வரம்புகளை அறிந்து கொள்வது இது குடிமக்களின் மேலாதிக்கத்தைப் புரிந்துகொள்வது மற்றும் நீங்கள் தலைமை தாங்கும் நிறுவனத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பது பற்றியது" என்று பிபின் ராவத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
குடிமகனாக உரிமை
இருப்பினும், ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளது. நாட்டின் குடிமகனாக பேசுவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக கூறுகிறார்கள். பிபின் ராவத் டிசம்பர் 31ம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில் அடுத்த ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பொறுப்பேற்க உள்ளார்.