“அந்த வார்த்தை வாய் தவறி வந்தது..” - ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோரி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம்!
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறித்து காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், குடியரசுத் தலைவரிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.
காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' எனப் பேசியது பாஜக எம்.பிக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாகவும், குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கேட்பேன் என ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்திருந்த நிலையில், இன்று மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

சர்ச்சை பேச்சு
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் லோக்சபா குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, 'ராஷ்டிரபத்னி' எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஷ்டிரபதி பவனுக்கு அணிவகுத்து செல்வது குறித்து பேசிய அவர், 'ராஷ்டிரபத்னி' என்று குறிப்பிட்டார். அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்ளிட்ட பா.ஜ.க எம்.பி.க்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

ஆதிர் ரஞ்சன் விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, போராட்டத்தின் போது என்னிடம் செய்தியாளர்கள் எங்கே செல்கிறீர்கள் எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த நான், ராஷ்டிரபதியை சந்திக்க ராஷ்டிரபதி பவன் நோக்கி செல்கிறோம் எனக் கூறினேன். அப்போது வாய் தவறி ராஷ்டிரபத்னி என வந்துவிட்டது. நாக்கு பிறண்டதால் அவ்வாறு கூறி விட்டேன். ஒருபோதும் ஜனாதிபதியை மரியாதைக்குறைவாக பேசவில்லை." எனத் தெரிவித்தார்.

வாய் தவறி வந்துவிட்டது
மேலும், "நான் என்ன செய்ய வேண்டும்? நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள். சோனியா காந்தியை இந்த விவகாரத்தில் இழுக்க வேண்டம். குடியரசுத் தலைவர் என்பவர் பிராமண வகுப்பை சேர்ந்தவரோ அல்லது பழங்குடியின பெண்ணோ யாராக இருந்தாலும் அவர் ஜனாதிபதிதான். இது மிகவும் கவுரமிக்க பொறுப்பாகும். நான் ஜனாதிபதியிடம் நேரம் கேட்டிருக்கிறேன். நான் அவரிடம் மன்னிப்பு கேட்பேன்." எனத் தெரிவித்திருந்தார்.

பரபரப்பு
இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சயை கிளப்பியது. மக்களவையில் இருந்து சோனியா புறப்பட்டபோது சோனியா மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இதனால் சோனியா காந்தியும் கோபமாகப் பேசினார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மன்னிப்பு கடிதம்
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவரிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், " ராஷ்டிரபத்னி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்ததை என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications