சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு... காஷ்மீரில் என்ன சாதிச்சீட்டிங்க... அரசை விளாசிய காங்கிரஸ்!
டெல்லி: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பிறகு அங்கு இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ளூர் வணிகம் பாதிக்கப்பட்டதால் ரூ .90,000 கோடிக்கு மேல் வருமானம் இழந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்ல முடியாதவர்களை மீண்டும் காஷ்மீருக்கு கொண்டு வாருங்கள் என்றும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீர் மாநிலம், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. காஷ்மீரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள், யூனியன் பிரதேச அதிகாரிகளாக மாற்றப்பட்டனர். இதற்கான அவசர சட்டத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் பிறப்பித்தார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
இந்த அவசர சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுப்பதற்காக, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது:-
இயல்பு நிலைக்கு திரும்பவில்லை
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர் நீங்கள்(மத்திய அரசு) எண்ணிய கனவுகள் நிறைவேறவில்லை. ஜம்மு-காஷ்மீர் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அங்கு உள்ளூர் வணிகம் பாதிக்கப்பட்டதால் ரூ .90,000 கோடிக்கு மேல் வருமானம் இழந்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நீங்கள் எவ்வாறு விஷயங்களை மேம்படுத்துவீர்கள் என்பதை எங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.அமித் ஷா ஜி நீங்கள் காஷ்மீருக்கு பிராமணர்களை திரும்ப அழைத்து வருவீர்கள் என்று சொன்னீர்கள். பண்டிதர்களை மீண்டும் கொண்டுவருவதில் வெற்றி பெற்றீர்களா?
தெளிவுப்படுத்துங்கள்
நீங்கள் கில்கிட் பால்டிஸ்தானை மீண்டும் கொண்டு வருவீர்கள் என்று சொல்கிறீர்கள். குறைந்த பட்சம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை, காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு செல்ல முடியாதவர்களை மீண்டும் காஷ்மீருக்கு கொண்டு வாருங்கள். 200-300 ஏக்கர் நிலத்தை பண்டிதர்களுக்கு வழங்குவதில் நீங்கள் வெற்றிபெறவில்லை. ஜம்மு-காஷ்மீர் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.