கே சி வேணுகோபாலை அலேக்காக தூக்கிய போலீஸ்.. டெல்லி காங். போராட்டத்தில் பரபரப்பு! தீயாக பரவும் வீடியோ
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியதைக் கண்டித்து நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் கே.சி.வேணுகோபாலை போலீசார் அலேக்காக தூக்கிச் செல்லும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை முன் ராகுல் காந்தி இன்று ஆஜரானார். இந்த விசாரணை முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது என்று கூறி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
ஜனநாயகமா.. 2000 கோடி ரூபாய் சொத்தை பாதுகாக்கனும், அதற்குத்தான் காங்கிரஸ் போராட்டம்- விளாசிய ஸ்மிருதி
காங்கிரஸ் பேரணிக்கு மறுப்பு
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராகும் போது, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்கள் கண்டன பேரணி செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக டெல்லி காங்கிரஸ் கட்சி சார்பாக போலீஸாரிடம் அனுமதி கேட்ட போது, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி கொடுக்க மறுக்கப்பட்டுள்ளது. பேரணிக்காக மேல்முறையீடு செய்தபோதும், அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பை எதிர்த்து பேரணி
இருந்தும் ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் புறப்பட்ட போது, ஏராளமான காங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர்களும், தொண்டர்களும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அப்போது மூத்தத் காங்கிரஸ் தலைவர்கள் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.
கே.சி.வேணுகோபாலை தூக்கிய போலீஸ்
தொடர்ந்து ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாநிலங்களவை உறுப்பினரும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான கே.சி.வேணுகோபாலை போலீசார் தூக்கிச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியங்கா காந்தி
பின்னர் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்தத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் துக்ளக் சாலையில் உள்ள காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். தொடர்ந்து அங்கு சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபாலை சந்தித்து நலம் விசாரித்தார். இந்தக் கண்டன பேரணி தொடர்பாக காங்கிரஸ் கட்சி தரப்பில், இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவே பேரணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.