டெல்லியில் தடையை மீறி "சத்தியாகிரக பேரணி".. காங்கிரஸ் அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் கைது
டெல்லியில் தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக கூடியிருந்த தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லி: அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்தவும் சத்தியாகிரக பேரணி நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு கூடிய தொண்டர்கள் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று காலை ராகுல் காந்தி நேரில் ஆஜராக உள்ளார். அந்த நேரத்தில் சத்யாகிரக பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டதை அடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று ஆஜராக உள்ளார்.
அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு இன்று காலை காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக அனைத்து டெல்லிக்கு வருமாறு அனைத்து காங்கிரஸ் எம்பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து இன்று காலை 10 மணிக்கு, மத்திய அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள் பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பேரணிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கட்சி மீண்டும் டெல்லி காவல்துறையை அணுகியுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே காவல்துறையினரின் தடையை மீறி காங்கிரஸ் கட்சி அலுவலகம் காலை முதலே நிர்வாகிகள் கூடினர். போராட்டம் நடத்தவும் பேரணி செல்லவும் காத்திருந்த நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.