கொரோனாவால் சுவை, வாசனை மட்டுமல்ல பார்வையும் பாதிக்குமாம் - அச்சுறுத்தும் ஆய்வு முடிவுகள்
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் தங்களது பார்வை திறனில் சிக்கல்களை எதிர் கொள்வதாக கூறி இருக்கிறார்கள்.
டெல்லி: கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்19 பெருந்தொற்று நம் உடலில் பல உறுப்புகளை பாதிக்கிறது. நுரையீரலை இந்நோய் பெரிய அளவில் பாதிக்கிறது என்றாலும் இதயமும் இதனால் பாதிக்கப்படுகிறது. சுவையிழப்பு,வாசனை பாதிப்பு, கண் பார்வை மங்கல் என ஐம்புலனையும் பாதிக்கிறது கொரோனா தொற்று என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு நோய் குணமடைந்த பின்னரும் பக்கவிளைவினால் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு வெளியான ஒரு ஆய்வு முடிவில், கோவிட் நோயாளிகள் கண் தொடர்பாக அனுபவிக்கும் மிகவும் பொதுவான கோளாறுகளில் ஒளி உணர்திறன், மங்கலான பார்வை, கண்கள் சிவப்பாக மாறுவது உள்ளிட்டவை இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. கறுப்பு பூஞ்சை தொற்றினாலும் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கோவிட் -19 நோயை ஏற்படுத்தும் கொரோனா வைரஸ் வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பை மட்டுமல்ல, மனிதர்கள் இந்த உலகை உணர உதவும் அனைத்து வழிகளையும் பாதிக்கிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தொற்றிலிருந்து குணமடைந்த பலர் தொடர்ந்து கேட்கும் திறன் இழப்பை அனுபவித்தனர். இந்த இழப்பு மிதமாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஆடியோலஜி மார்ச் மாத இதழில், கோவிட்-19 அறிகுறிகளின் பிற அறிக்கைகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் மதிப்பாய்வு செய்தனர்.
இதன் முடிவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 8% நோயாளிகளுக்கு காது கேளாமை தொடர்பான சிக்கல் ஏற்பட்டதாக கூறினர். தவிர சுமார் 15% பேர் தங்கள் காதுகளில் ரீங்கார ஒலி கேட்பது போன்ற உணர்வுகளை எதிர்கொண்டனர். அதே போல கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த சிலர் தங்களது பார்வை திறனில் சிக்கல்களை எதிர் கொள்வதாக கூறி இருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட இது தொடர்பான ஆய்வில் சுமார் 100 பேரை ஆய்வாளர்கள் மதிப்பீடு செய்த போது அவர்களில் சுமார் 60% பேருக்கு மரத்து போதல் மற்றும் கூச்ச உணர்வு உள்ளிட்டவை காணப்பட்டன. இவ்வுணர்வுகள் அவர்களுக்கு 6 முதல் 9 மாதங்கள் வரை நீடித்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 400 கோவிட் -19 நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், சுமார் 10% நோயாளிகளுக்கு வெண்படலம், பார்வை மாற்றங்கள் மற்றும் கண் எரிச்சல் உள்ளிட்ட கண் சார்ந்த கோளாறுகள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் என்றும் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தொடர்ந்து நரம்பியல் பாதிப்பு தொடர்பான அறிகுறிகளை கோவிட் தொற்று ஏற்படுத்துவதால், மேற்கண்ட பாதிப்புகள் தவிர தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் தொடு உணர்வும் பாதிக்கப்படலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பார்வை, வாசனை, சுவை, தொடுதல் மற்றும் கேட்கும் உணர்வை இழந்ததாக தெரிவித்துள்ளனர் என்று நேஷனல் ஜியோகிராஃபிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதனிடையே கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து குணமாகிய நோயாளிகளில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் பேருக்கு ஏதோ ஒரு வகை இதயம் தொடர்பான பிரச்சனை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இத்தொற்று நுரையீரலில் ஃபைப்ரோசிஸ் என்ற பிரச்சினையை ஏற்படுத்துவதை போலவே இதயம் கல்லீரல் கணையம் போன்ற மற்ற உறுப்புகளையும் பாதிக்கிறது. இதயத்தை பொறுத்தவரையில் அது இதய தசைகளில் அழற்சியை ஏற்படுத்தி மயோகார்டைட்டிஸ் என்ற பிரச்சனையை உருவாக்குகிறது.
இதனால் இதயத்துடிப்பில் மாற்றங்களும் மாரடைப்பும் ஏற்படலாம். ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத்துடிப்பில் ஏற்றக் குறைவு உள்ளவர்கள், ஏற்கனவே இதய செயலிழப்பு உள்ளவர் போன்றோருக்கு கோவிட் தொற்றுக்கு பிறகு இதயத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மாரடைப்பினால் இறப்போரின் எண்ணிக்கை இந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இரு மடங்காகி உள்ளது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications