இந்தியாவில் முடிவுக்கு வரும் 3வது அலை..? சரியும் கொரோனா பாதிப்பு.. ஐசிஎம்ஆர் கொடுத்த முக்கிய அப்டேட்
டெல்லி : இந்தியாவில் இன்று மேலும் 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட 13% இன்று குறைவாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை முடிவை நோக்கி செல்வதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக 7 மாதங்களுக்கு மேலாக பாதிப்பு இருந்தது. கடந்த வருடம் இரண்டாவது அலை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட போதும் கடந்த ஆண்டைவிட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.
தற்போது 3வது அலை இந்தியாவில் உள்ள நிலையில், ஜனவரியில் தினசரி பாதிப்பு உச்சம் தொட்டது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட போதிலும் கடந்த அலைகளைப் போல முழு ஊரடங்கு விதிக்கப்படவில்லை. தடுப்பூசி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது பாதிப்பு சரிந்து வருகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு! ஆக்டிவ் கேஸ்களும் 60 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தது
கொரோனா 3வது அலை
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் இன்று மேலும் 50,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய பாதிப்பை விட 13% இன்று குறைவாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 407 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,25,86,544 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
804 பேர் உயிரிழப்பு
கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஒரே நாளில் 804 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதன் காரணமாக கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லடசத்து 7 ஆயிரத்து 981 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,36,962 பேர் மீண்டுள்ளதாகவும், இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே14 லட்சத்து 68 ஆயிரத்து 120 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் விகிதம் 97.37 % ஆக உள்ளது சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தற்போது 6 லட்சத்து 10 ஆயிரம் 443 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 46,82,662 பேருக்கும், இதுவரை 1,72,29,47,688 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிவதற்காக நேற்று மட்டும் ஒரே நாளில் 14,50,532 கொரோனா மாதிரிகளும், இதுவரை மொத்தம் 74,93,20,579 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐசிஎம்ஆர் தகவல் அளித்துள்ளது.
3வது அலை நிறைவு?
பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரம் அல்லது இறுதிப்பகுதியில் கொரோனா மூன்றாவது அலை தனது இறுதி அத்தியாயத்தில் பயணிக்கும் என ஏற்கனவே நிபுணர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. தற்போதைய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை பல மாநிலங்களில் கட்டுக்குள் உள்ளது. தற்போது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.