அடங்க மறுக்கும் கொரோனா.. 4 மாதங்களில் முதல் முறை! இந்தியாவில் 3 சதவீதத்தை தாண்டிய பாசிட்டிவ் விகிதம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்குப் பின்னர் பாசிட்டிவ் விகிதம் மீண்டும் அதிகரித்து உள்ளது அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
உலகெங்கும் ஓமிக்ரான் கொரோனா காரணமாக சில மாதங்களுக்கு முன்பு ஒரு அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் உலகெங்கும் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தது.
ஆனால், ஓமிக்ரான் கொரோனா தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது சற்றே நல்ல விஷயம். அதேபோல ஓமிக்ரான் பாதிப்பும் மிக விரைவில் கட்டுக்குள் வந்தது.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக 8,000-த்தை கடந்து பதிவாகி உள்ளது- 4 பேர் மரணம்
கொரோனா
இதையடுத்து உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கின. இதனால் மக்களும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கினர். இந்தச் சூழலில் தான் இப்போது வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதற்கு ஓமிக்ரான் துணை திரிபுகளே முக்கிய காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. குறிப்பாக ஓமிக்ரான் BA4 மற்றும் BA5 இதற்குக் காரணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியா
உலக நாடுகளைப் போலவே இந்தியாவிலும் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதமும் எழுதி இருந்தது. இந்நிலையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,084 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு 4,32,301,01ஆக அதிகரித்துள்ளது.
பாசிட்டிவ் விகிதம்
நாட்டில் இப்போது வைரஸ் பாசிட்டிவ் விகிதம் 3.24%ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாசிட்டிவ் விகிதம் கடந்த நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளது. 100 பேர் டெஸ்ட் செய்யப்படும் போது எத்தனை பேருக்கு பாசிட்டிவ் ஆக வருகிறது என்பதே இந்த பாசிட்டிவ் விகிதம் ஆகும். கடந்த பிப்.13இல் இது 2.23%ஆக குறைந்து இருந்தது. இப்போது ஒவ்வொரு 100 பேரில் 3.24 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. கொரோனா அலை உச்சத்தில் இருந்த போது, சில இடங்களில் இது 30 வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு
அதேபோல நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 47,995ஆக அதிகரித்துள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா உயிரிழப்பு 5,24,771ஆக உயர்ந்துள்ளது. வேக்சின பணிகளை பொறுத்தவரை இந்தியாவில் இதுவரை 195.19 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. மூன்றாவது முன்னெச்சரிக்கை டோஸ் உட்பட நாட்டில் மொத்தம் 3,89,35,251 டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
மத்திய அரசு
கடந்த திங்கள்கிழமை மட்டும் 4,592 நோயாளிகள் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,26,57,335ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 98.68% பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் சூழலில், நிலைமையைக் கையை விட்டுச் செல்லாமல் இருக்க கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தும்படி அறிவுறுத்தி உள்ளது.
அறிவுறுத்தல்
இது தொடர்பாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் புதிய அறிவுறுத்தலையும் வழங்கி உள்ளார். அதாவது கொரோனாவை கட்டுப்படுத்த ஐந்து மூலோபாய திட்டத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார் - சோதனை, கண்காணிப்பு, சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா வைரஸுக்கு பொருத்தமான நடத்தையை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.